அஸ்வான் அணை என்பது, எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. நைல் ஆற்றினால் சுற்றுப் புறங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதும், மின் உற்பத்தி செய்வதும், வேளாண்மைக்கு நீர் வழங்குவதுமே இந்த அணைகள் அமைப்புத்திட்டங்களின் நோக்கமாகும்.
நைல் ஆறு கட்டுப்படுத்தப்படாது இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கிழக்காபிரிக்காவில் இருந்து வரும் நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வெள்ளம் நல்ல சத்துப் பொருட்களையும், கனிமங்களையும் கொண்டுவந்து நைலைச் சுற்றிய பகுதிகளை வளப்படுத்தும். இது வேளாண்மைக்கு வாய்ப்பான நிலமாக விளங்கியது. ஆற்றோரப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகமானபோது, வேளாண்மை நிலங்களையும், பருத்திச் செய்கையையும் வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கூடிய நீர்வரத்துள்ள ஆண்டுகளில் பயிர்ச் செய்கை முழுவதும் அழிந்துபோகும் அதே வேளை, குறைவான நீர்வரத்துக் காலங்களில் வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன.
இவற்றுள் முதலாவது அணையைப் பிரித்தானியர் 1889 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். இது 1902 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இது 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சர் வில்லியம் வில்காக்ஸ் (William Willcocks) என்னும் பொறியாளர் இத் திட்டத்தை வடிவமைத்திருந்தார். சர் பெஞ்சமின் பேக்கர் (Benjamin Baker), சர். ஜான் எயார்ட் (John Aird) ஆகிய முன்னணிப் பொறியாளர்களும் இத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஜான் எயார்டின் ஜான் எயார்ட் அண்ட் கோ என்னும் நிறுவனமே முதன்மை ஒப்பந்தகாரராக இருந்தது. இவ்வணை 1,900 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது. முதல் வடிவமைப்பு போதுமானதாக இராததால் 1907-1912, 1929-1933 ஆகிய காலப் பகுதிகளில் இரண்டு தடவைகள் அணை உயர்த்திக் கட்டப்பட்டது.
1946 ஆம் ஆண்டில் அணை நிரம்பி வழிந்தபோது, அணையை மேலும் உயர்த்துவதிலும், இன்னொரு புதிய அணையை பழைய இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் ஆற்றின் மேல் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கமால் அப்துல் நாசரைத் தலைவராகக் கொண்டு கட்டுப்படாத அலுவலர்களால் நிகழ்த்தப்பட எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் 1954 நாலாம் ஆண்டில் புதிய அணை அமைப்பதற்கான முறையான திட்டங்கள் தொடங்கின. தொடக்கத்தில் பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக்காவும் 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதன் மூலம் இத் திட்டத்துக்கு உதவுவதாக இருந்தது. இதற்குப் பதிலாக நாசர் அரபு-இஸ்ரேல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தலைமை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாசரை ஒழித்துக் கட்டுவதற்காக உருவான இரகசியத் திட்டமொன்றின் ஒரு பகுதியாக, 1956 ஆம் ஆண்டு ஜூலையில், இந்த உதவி வழங்கும் திட்டத்தை இரு நாடுகளும் நிறுத்திவிட்டன. எகிப்து செக்கோஸ்லவாக்கியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஆயுத ஒப்பந்தமும், அது மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்ததும் இம் முடிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. 1958 இல் சோவியத் ஒன்றியம் புதிய அணைத் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. சோவியத் தொழில்நுட்பவியலர்களையும், கனரக எந்திரங்களையும் கொடுத்து உதவியது. பாரிய பாறை மற்றும் களி மண்ணாலான அணை சோவியத்தின் நீரியல்திட்ட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டு, 21 ஜூலை 1970 இல் நிறைவெய்தின. இந் நீர்த்தேக்கங்களினால் தொல்லியல் களங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்துத் தொல்லியலாளர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 24 முக்கிய தொல்லியற் சின்னங்கள் அகழப்பட்டு வேறிடங்களுக்கு மாற்றப்பட்டன. சில உதவி செய்த நாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக டெபூட் கோயில் மாட்ரிட்டுக்கும், டெண்டூர் கோயில் நியூ யார்க்குக்கும் அனுப்பப்பட்டன.