பாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் (Bhaja Caves or Bhaje caves) (மராத்தி: भाजे) இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும். கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது. மல்வலி தொடருந்து நிலையம், பாஜே கிராமத்தின் அருகில் உள்ளது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்குகைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.
ஈனயானம் பௌத்தப் பிரிவினருக்கு உரிய இக்குகைள், 14 தூபிகள் கொண்டுள்ளது. இத்தூபிகளில் சிலவற்றில் அம்பினிகா , தம்மகிரி மற்றும் சங்கதினா போன்ற பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற குகை எண் 12ல் உள்ள சைத்தியத்தில் , மரவேலைப்பாடுகளுடன், லாட வடிவ மேற்கூரை கொண்டுள்ளது. குகை எண் 28ல் உள்ள புத்த விகாரத்தின் முற்றவெளியில் அழகிய தூண்களைக் கொண்டுள்ளது. இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருதங்கம் இசைக்கும் மரச்சிற்பங்கள் மற்றும் நடனமாடும் மங்கைகையர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.
இக்குகைகளின் சிற்பங்கள், தலை அலங்காரம், மாலைகள் மற்றும் நகை வேலைபாடுகளுடன் கூடியது.
குகை எண் 29ல் உள்ள விகாரையில் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவு வாயில்களில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.