ஆழ்கடலால் சூழப்பட்ட கோகோஸ் தீவுப்பகுதியானது மூச்சுவிடு அமைப்புடன் உள் நீச்சல் அடித்தல் போன்ற பொழுது போக்குக்கும், கொம்பன் சுறா, திருக்கை, ஓங்கில் மற்றும் பிற பெரிய கடல் வாழினங்களுக்காக சிறப்பாக அறியப்படுகிறது. இதன் ஈரமான காலநிலை, கடலியல் தன்மை போன்றவை இத்தீவுக்கான ஒரு தனித்த சூழலியல் பண்பை அளிக்கின்றன, இது கலாபகசுத் தீவுகள் அல்லது வேறு எந்த தீவுடனும் (எடுத்துக்காட்டாக, மால்பிலோ, கோர்கோனா அல்லது கோயிபா) ஒப்பிடத்தக்கதாக இல்லை.
தற்போதைய நிலை மற்றும் சர்வதேச சிறப்பு
கோஸ்டா ரிகா நாடானது கோகோஸ் தீவை தேசிய பூங்காவாக 1978 ஆம் ஆண்டில் அறிவித்தது. கோகோஸ் தீவு தேசியப் பூங்காவானது 1997 இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக பாலம்பரிய களத்தின் எல்லையானது 2002 இல் இதைச்சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் சேர்த்ததாக 1,997 km2 (771 சது மை) பரப்பளவு கொண்டதாக விரிவாக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் கோகோஸ் தீவானது உலகின் புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, தீவுகள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
உலகில் உள்ள 10 சிறந்த மூச்சுவிடு அமைப்புடன் உள் நீச்சல் (ஸ்கூபா டைவிங்) இடங்களில் ஒன்றாக கோகோஸ் தீவு இடம்பெற்றுள்ளது. இப்பகுதியானது ஆழ் கடல் மற்றும் ஆழமிலா கடல் நீர்ப்பரப்பு ஆகியவை சந்திக்கும் புள்ளியில் உள்ளதும், இப்பகுதியில் உள்ள பெரிய மீன் வகைகளும் இப்பகுதியின் சிறப்பம்சங்களாக உள்ள.புகழ்பெற்ற பெருங்கடல் குறிப்பு வல்லுநரான ஜாக் கியூஸ்டுவே பலமுறை இத்தீவுக்கு வந்துள்ளார், இவர் 1994 ஆம் ஆண்டில் இத்தீவை "உலகின் மிக அழகான தீவு" என குறிப்பிட்டார். கோகோஸ் தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் சட்டவிரோதமாக பெரிய அளவில் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தீவைப் பாதுகாப்பதை இந்தப் புகழுரைகள் வலியுறுத்துகின்றன.
கோஸ்டா ரிகா பூங்கா காவலர்கள் மட்டுமே கோகோஸ் தீவில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருக்க ஆங்கில விரிகுடா உள்ளிட்ட இரு முகாம்கள் தீவில் இவர்களால் நிறுவப்பட்டுள்ளது. தேசியப் பூங்கா காவலர்களின் அனுமதியைப் பெற்றே தீவில் சுற்றுலா பயணிகள், கப்பல் பணியாளர்கள் போன்றோர் தீவுக்கு செல்ல இயலும். மேலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்கவோ அல்லது தீவில் உள்ள எந்த ஒரு தாவரம், விலங்கினம், தாதுக்கள் போன்றவற்றை சேகரித்து எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.எப்போதாவது அமெச்சூர் வானொலியான DXpeditions வர அனுமதியளிக்கப்படுகிறது.
இந்த தீவானது கடற்கொள்ளை புதையலைத் தேடுவோர் மத்தியில் மிகப்பிரபலமாக இருந்துள்ளது. பெனட்டோ புனிட்டோ, லிமா புதையல் போன்ற பல புதையல்களைத் தேடி 300 க்கும் அதிகமான பயணங்கள் இத்தீவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் ஒரு சில தங்க நாணயங்கள் இங்கு கண்டறியப்பட்டன. இங்கு புதைக்கப்பட்ட புதையல்கள் பற்றிய பல கதைகள் நிலவிவருகின்றன. இங்கு புதையல்களைத் தேட கோஸ்டா ரிகா அரசாங்கம் தடைசெய்துள்ளது.