மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபு மொழி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்கம்: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் கி.மு. 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது கெய்ரோவின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த நகரமானது, பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய கோட்டைகளாலும், பெரிய தனித்துவ வடிவச் சுவர்களாலும், இந்த நகரம், வெள்ளைச்சுவர்கள் (Inebou-Hedjou, பிறகு Ineb-Hedj) என அழைக்கப்பட்டது. மேலும், இரட்டை நிலங்களின் வாழ்க்கை (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. பெப்பி I (Pepi I Meryre) என்ற அரசனின் பெயரானது, கிரேக்க மொழியில் திரிபு அடைந்து, மெம்பிசு' என இன்று அழைக்கப்படுகிறது.
நைல் நதியின் மேற்குக் கரையோரம், கெய்ரோவுக்கு 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மக்கள் வாழவில்லை. இந்நகரம் கட்டும் போது, 30000 மக்கள் வசித்ததாக, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்நகருக்கு அருகே, மித் ரகினா(Mit Rahina) என்ற ஊரிலே மக்கள் வசிக்கின்றனர்.