சிமித்சோனிய நிறுவனம் (Smithsonian Institution) என்பது, 1846ல் "அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமாக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். பல அருங்காட்சியகங்களையும், ஆய்வு மையங்களையும் உள்ளடக்கிய இந்நிறுவனம், ஐக்கிய அமெரிக்க அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. தொடக்கத்தில் "ஐக்கிய அமெரிக்கத் தேசிய அருங்காட்சியகம்" என்ற பெயரில் இது அமைக்கப்பட்டது. 1967ல் இப்பெயர் ஒரு நிர்வாக அமைப்பாக இல்லாமல் போய்விட்டது. சிமித்சோனிய நிறுவனம் 138 மில்லியன் பல்வேறுபட்ட பொருட்களையும், பத்தொன்பது அருங்காட்சியகங்கள், ஒன்பது ஆய்வு மையங்கள், ஒரு விலங்கினக் காட்சியகம் ஆகியவற்றுடன் பெரும்பாலும் கொலம்பியா மாவட்டத்தில் அடங்கும் வரலாறு மற்றும் கட்டிடக்கலை அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அரிசோனா, மேரிலாந்து, மசச்சூசெட்சு, நியூயார்க் நகரம், வெர்சீனியா டெக்சாசு, பனாமா ஆகிய இடங்களிலு கூடுதல் வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும், பியூட்டோரிக்கோ, பனாமா ஆகிய நாடுகளையும் சேர்ந்த 200 நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் சிமித்சோனிய நிறுவனத்தின் இணைந்த அமைப்புக்களாக உள்ளன. ஆண்டொன்றுக்கு இங்கு வரும் 30 மில்லியன் வருகையாளர்களிடம் இருந்து நுழைவுக் கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை. நிறுவனத்தின் ஓராண்டுச் செலவு $1.2 பில்லியன். இதில் 2/3 பங்கு அமெரிக்க அரசினால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து கிடைக்கிறது. பிற வருமானங்களில், நிறுவனத்தின் அறக்கொடைகள், தனியாட்களும் நிறுவனங்களும் வழங்கும் நிதி, சாந்தா, உரிமங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பன அடங்குகின்றன. இந்நிறுவனம் சிமித்சோனியன், ஏர் அன்ட் இசுப்பேசு (Air & Space) ஆகிய இது இதழ்களை வெளியிடுகிறது.
பிரித்தானிய அறிவியலாளர் சேம்சு சிமித்சன் (James Smithson) தனது செல்வத்தில் பெரும்பகுதியைத் தனது மருமகன் என்றி சேம்சு அங்கர்போர்டு (Henry James Hungerford) என்பவருக்கு விட்டுச் சென்றார். 1835ல் அங்கர்போர்டு பிள்ளைகள் இல்லாமல் இறந்தபோது, சிமித்சனின் விருப்புறுதியின்படி "மனிதரிடையே அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமான நிறுவனம் ஒன்றை வாசிங்டனில், சிமித்சோனிய நிறுவனம் என்ற பெயரில் நிறுவுவதற்காக சொத்துக்கள் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துக்குச்" சென்றது. அமெரிக்கக் காங்கிரசு, 1836 யூலை முதலாம் தேதி, நாட்டுக்கு வழங்கப்பட்ட இந்தக் கொடையை ஏற்றுக்கொண்டதுடன் இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை அடைவதற்கும் உறுதியளித்தது. இந்தச் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அமெரிக்க இராசதந்திரியான ரிச்சார்டு ரசு (Richard Rush) என்பவரை அப்போது சனாதிபதியாக இருந்த ஆன்ட்ரூ சாக்சன் (Andrew Jackson) இங்கிலாந்துக்கு அனுப்பினார். 1838 ஆகத்து மாதத்தில் அக்காலத்தில் ஏறத்தாழ $500,000 பெறுமதியான (2016ல் பெறுமதி ஏறத்தாழ $11,245,000) 104,960 தங்க நாணயங்களைக் கொண்ட 105 பைகளுடன் ரசு நாடு திரும்பினார்.
பணம் கைக்கு வந்த பின்னர் எட்டு ஆண்டுகளாக சிமித்சனின் "அறிவின் வளர்ச்சிக்கும் பரவலுக்குமாக" என்னும் தெளிவற்ற விருப்பத்தைப் புரிந்து கொள்வதில் காங்கிரசில் சர்ச்சை நிலவியது. அதேவேளை கிடைத்த பணம் ஆர்கென்சாசு மாநிலத்தால் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் இது முறிவு நிலைக்கு வந்துவிட்டது. பலத்த விவாதங்களுக்குப் பின்னர் பின்னாணில் சனாதிபதியான அப்போதைய மசச்சூசெட்சு பிரதிநிதி சான் குயின்சி ஆடம்சு இழந்த பணம் முழுவதையும் வட்டியுடன் திருப்பித்தர காங்கிரசை ஒப்புக்கொள்ள வைத்ததுடன், இந்தப் பணத்தை அறிவியலுக்கும் கல்விக்குமான நிறுவனம் ஒன்றை உருவாக்க ஒதுக்குவதற்குக் காங்கிரசு உறுப்பினர்களைச் சம்மதிக்கவும் வைத்தார். இறுதியாக 1846 ஆகத்து 10 ஆம் தேதி சனாதிபதி சேம்சு கே. போல்க், ஐக்கிய அமெரிக்காவின் ஒரு அறங்காவலர் மேலாண்மை நிறுவனமாக சிமித்சோனிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான சட்ட விதிகளில் கையெழுத்திட்டார். இந்நிறுவனம் ஒரு ஆட்சிக்குழுவினாலும் ஒரு செயலராலும் நிர்வாகம் செய்யப்பட்டது.
சிமித்சோனிய நிறுவனத்தின் முதற் செயலர் யோசெப் என்றி அந்நிறுவனம் ஒரு அறிவியல் ஆய்வுக்கான மையமாக இருக்கவேண்டும் என விரும்பினாலும், அது வாசிங்டனதும், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தினதும் சேகரிப்புக்களுக்கான ஒரு வைப்பகமாகவும் செயற்பட்டது. 1838 - 1842 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை உலகைச் சுற்றிய ஐக்கிய அமெரிக்க ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது. இப்பயணத்தின்போது, ஆயிரக் கணக்கான விலங்கு மாதிரிகள், 50,000 பாதுகாக்கப்பட்ட தாவர மாதிரிகள், பல்வேறுபட்ட விலங்கின ஓடுகள் கனிமங்கள், வெப்பமண்டலப் பறவை மாதிரிகள், கடல் நீரைக்கொண்ட சாடிகள், தென் பசுபிக் பகுதியில் கிடைத்த இனவரைவியல் அரும்பொருட்கள் போன்றவை பெருமளவில் திரட்டப்பட்டன. இவை சிமித்சோனிய நிறுவனச் சேகரிப்புக்களின் ஒரு பகுதி ஆயின. இதைப்போலவே மெக்சிக்க எல்லை மதிப்பாய்வு, பசிபிக் தொடர்வண்டிப்பாதை மதிப்பாய்வு போன்ற மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைத்த சேகரிப்புக்களும் சிமித்சோனிய நிறுவனத்துக்கே வந்து சேர்ந்தன. மேற்படி ஆய்வுகள் மூலம் தாயக அமெரிக்க கலைப் படைப்புக்களும், இயற்கை வரலாற்று மாதிரிகளும் கிடைத்தன.
சிமித்சோனிய நிறுவனக் கட்டிடத்தின் ("த காசில்") கட்டுமான வேலைகள் 1849ல் தொடங்கின. கட்டிடக்கலைஞர் இளைய யேம்சு ரென்விக் என்பவாரால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் உள்ளக அலங்கார வேலைகள் பொது ஒப்பந்தகாரர் கில்பர்ட் கமெரூனால் நிறைவௌ செய்யப்பட்டு, 1855ல் திறந்துவைக்கப்பட்டது. சிமித்சோனிய நிறுவனத்தின் முதல் விரிவாக்கம், 1881ல் கட்டப்பட்ட கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடம் ஆகும். 1876ன் பிலடெல்பியா நூற்றாண்டுக் கண்காட்சி போதிய வருமானம் ஈட்டினால் அருங்காட்சியகத்துக்குப் புதிய கட்டிடம் ஒன்றை அமைத்துத் தருவதாக காங்கிரசு உறுதியளித்திருந்தது. அக்கண்காட்சி இலாபம் ஈட்டியதால், புதிய கட்டிடம், ஐக்கிய அமெரிக்க இராணுவப் பொறியாளர் குழுவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மொன்ட்கொமரி சி. மெயிக்சு என்பவர் முன்னர் தயாரித்த திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டிடக்கலைஞர்களான அடோல்ப் குளுசு, பால் சுல்சே ஆகியோரால் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இக்கட்டிடம் 1881 இல் திறந்து வைக்கப்பட்டது.
சிமித்சோனிய நிறுவனத்தின் வாழும் விலங்குகள் பிரிவுக்காக 1889 இல் தேசிய விலங்கியல் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. முதலில் "த காசில்" கட்டிடத்திலும், பின்னர் கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடத்திலும் இருந்த இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்துக்காக 1911ல் புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.