பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) இலங்கையில் அமைந்துள்ள அனாதை யானைகளைப் பராமரிக்கும் ஒரு சரணாலயம் ஆகும். இங்கு சுமார் அறுபதற்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளில் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.
1975 இல் சுமார் 25 ஏக்கர் தென்னம் தோப்பு காணியில் மகா ஓயாவை ஒட்டி இந்தப் புகலகம் அமைக்கப்பட்டது. அந்த நாட்களில் முதன்மையாக இங்கு தாய் கொலை செய்யப்பட்ட யானைகள் அல்லது குழியினுள் அகப்பட்டு தாய் இறந்தபின் அனாதையான யானைகள் பராமரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் இந்த அனாதை மடம் இருந்தாலும் பின்னாளில் பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்த அனாதை மடம் அமைந்தது. ஆயினும் மீளவும் தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு இந்த அனாதை மடம் மாற்றப்பட்டது. தெகிவளை விலங்கியல் பூங்காவில் இருந்து இறுதியாக பின்னவள எனும் இடத்திற்கு இந்த அனாதை மடம் மாற்றப்பட்டது. இந்த அனாதை மடத்தைப் பார்க்கவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அனாதை மடம் நிர்வகிக்கப்படுகின்றது.