கிரிமியப் பாலம் (Crimean Bridge, உருசிய மொழி: Крымский мост, tr. கிரீம்ஸ்கி மொஸ்த், கெர்ச்சீன்ஸ்கி மொஸ்த்), அல்லது கெர்ச் நீரிணைப் பாலம், உருசியாவினால் கட்டப்பட்ட இரண்டு சமாந்தரப் பாலங்களாகும். இப்பாலங்கள் உருசியாவில் கிராஸ்னதாரில் உள்ள தமான் மூவலந்தீவையும், கிரிமியாவில் உள்ள கெர்ச் மூவலந்தீவையும் கெர்ச் நீரிணையூடாக இணைக்கின்றன. (உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியாவை உருசியா கைப்பற்றி வைத்துள்ளது). இப்பாலங்களூடாக நெடுஞ்சாலைப் போக்குவரத்தும், தொடர்வண்டிப் போக்குவரத்தும் நடைபெறுகின்றன. 18.1 கிமீ நீளமான இப்பாலம் உருசியாவிலும், ஐரோப்பாவிலும் மிக நீளமான பாலமாகும்.
1903 இலேயே இப்பாலம் அமைப்பதற்கான பேச்சுக்கள் இருந்து வந்திருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டிலேயே கிரிமியா உருசியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. 2015 சனவரியில், பல பில்லியன் செலவிலான ஒப்பந்தம் அர்க்காதி ரொத்தன்பர்கின் ஸ்த்ரோகாஸ்மொந்தாசு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.. 2015 மே மாதத்தில் இதற்கான அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின. நெடுஞ்சாலைக்கான பாலம் 2018 மே 16 இல் திறந்து வைக்கப்பட்டது. தொடர்வண்டிப் பாதை 2019 ஆரம்பத்தில் முடிவடையவிருக்கிறது.