பிறப்பிடத் தேவாலயம் (Church of the Nativity) உலகிலுள்ள பழைமையானதும் தொடர்ந்து செயற்பாட்டிலுள்ளதுமான தேவாலயங்களில் ஒன்றாகும். பாலத்தீன ஆட்சிப் பகுதியில் உள்ள பெத்லேகேமில் அமைந்துள்ள இத்தேவாலயம் இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் தளத்தில் குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கிறித்தவர்களுக்கு மிகப் புனித இடமாக உள்ளது.
பெத்லகேம் ஊருக்கு வெளியே ஒரு குகைப் பகுதியில் மரியா இயேசுவை ஈன்றெடுத்தார் என்னும் செய்தியை கி.பி. 2-3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மறைச்சான்றாளர் யுஸ்தீன், ஒரிஜென் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
காண்ஸ்டண்டைன் மன்னரின் தாய் ஹெலன் அரசி இயேசு பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வாறே 327-333 ஆண்டுக் காலத்தில் முதல் கோவில் கட்டப்பட்டது.
அக்கோவில் 529இல் நிகழ்ந்த சமாரியர் கலகத்தின்போது அழிந்தது. அதே இடத்தில் பெரிய அளவில் புதிய கோவில் ஒன்றினை முதலாம் ஜஸ்டீனியன் பேரரசர் 565இல் கட்டி எழுப்பினார். அக்கோவில் இன்றுவரை நிலைத்துள்ளது.
இயேசு பிறந்த இடத்தில் எழுகின்ற கோவில் எல்லாக் கிறித்தவர்களுக்கும் முதன்மை வாய்ந்தது. இன்று இக்கோவிலின் ஆட்சி உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க மரபுவழி திருச்சபை, மற்றும் ஆர்மீனிய திருத்தூதர் சபை என்னும் மூன்று அமைப்புகளின் கையில் உள்ளது.
பிறப்பிடத் தேவாலயம் | |
---|---|
Name as inscribed on the World Heritage List | |
பிறப்பிடத் தேவாலயம் |
|
UNESCO region | மேற்காசியா |
Inscription history | |
பொறிப்பு | 2012 (36th தொடர்) |
வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட இக்கோவில் ஓர் உலகப் பாரம்பரியக் களம் என்று யுனெசுக்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தீன ஆட்சிப் பகுதியின் முதல் உலகப் பாரம்பரியக் களமாக இக்கோவில் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பழுதுபார்க்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் அக்கோவிலுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பது இம்முடிவுக்கு அடித்தளமாயிற்று.
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யுனெசுக்கோ நிறுவனம் பாலத்தீனத்தை நாடுகள் பட்டியலில் சேர்த்தது. அதுகுறித்து இசுரயேல் எதிர்ப்புத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.
அதன் பின்னணியில் யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களம் என்று அறிவித்தது.
இந்த முடிவு அரசியல் உள்ளர்த்தம் கொண்டது என்று இசுரயேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கூறின. ஆனால், பாலத்தீன ஆட்சிப் பகுதி யுனெசுக்கோ நிறுவனத்தின் முடிவை வரவேற்றுள்ளது.