சித்வான் தேசியப் பூங்கா (Chitwan National Park) (நேபாள மொழி:चितवन राष्ट्रिय निकुञ्ज) , நேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்காவாகும். இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கோ, இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக அங்கீகரித்துள்ளது.இத்தேசியப் பூங்கா 932 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.
வடக்கிலும், மேற்கிலும் பாயும் கண்டகி ஆறும், இரப்தி ஆறும் சித்வான் தேசியப் பூங்காவிற்கு இயற்கை அரண்களாக உள்ளது. சித்வான் தேசியப் பூங்காவின் கிழக்கில், பார்சா வனவிலங்கு சரணாலயமும், தெற்கில் இந்தியப் புலிகள் காப்பக அலகும் மற்றும் வால்மீகி தேசியப் பூங்காவும் உள்ளன.
நேபாள நாட்டின் தலைநகரம் காத்மாண்டிலிருந்து, சித்வான தேசியப் பூங்காவிற்குச் செல்ல, பேருந்துகள் மற்றும் விமான சேவைகள் உள்ளது.
சித்வான் தேசியப் பூங்கா பகுதி வெப்ப மண்டல பகுதியில் உள்ளதால் ஆண்டு முழுவதும் வெப்பம் காணப்படுகிறது. இப்பகுதியில் மழைக் காலம் சூன் மாத நடுவிலிருந்து துவங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை 2500 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. பின்னர் அக்டோபர் நடுவிலிருந்து பகல் வெப்ப நிலை 36 பாகையிலிருந்து 18 பாகையாக குறைந்து விடுகிறது. இரவு வெப்பநிலை 5 பாகையாகக் காணப்படுகிறது (செல்சியஸ்).
பூங்காவின் மொத்தப் பரப்பளவில் 70% மரங்கள், குறிப்பாக சால மரங்கள் மற்றும் பைன் மரங்கள் கொண்டுள்ளது. தெராய்-துயார் சாவன்னா புல்வெளிகள், பூங்காவின் மொத்தப் பரப்பளவில் 20% கொண்டுள்ளது. உலகின் உயரமான புல்வகைகளில் ஆசியா யாணைப் புற்கள் (Miscanthus sinensis) இப்பூங்காவில் அதிகமாக வளர்கிறது.
இப்பூங்காவின் செடி, கொடி, மரங்களைச் சார்ந்து, பட்டாம்பூச்சிகள், பூச்சிகள் மற்றும் சிற்றுயிர்கள் மற்றும் 700 வகையான காட்டுயிர்கள் சித்வான் தேசியப் பூங்காவில் உள்ளது. மேலும் நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், 17 வகையான பிற பாம்பினங்கள், நட்சத்திர ஆமைகள், உடும்புகள், இத்தேசியப் பூங்கா வழியாக பாயும் நாராயணி-இரப்தி ஆறுகளில் 113 வகையான மீனினங்கள் மற்றும் 235 கரியால் வகை முதலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
சித்வான் தேசியப் பூங்காவில் 43 வகையான பாலூட்டிகள் உள்ளது. காடுகளின் அரசனான வங்காளப் புலிகள், இப்பூங்காவின் முக்கிய பாலூட்டியாகும். உலகில் அதிக புலிகளைக் கொண்ட தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும். தற்போது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆறு பெண் புலிகளும், இரண்டு ஆண் புலிகளும் உள்ளது. 2010 மற்றும் 2011ஆம் ஆண்டில் கிடைத்த புகைப்படத் தகவல்களின் அடிப்படையில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 4.44 முதல் 6.35 புலிகள் வரை இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். பகலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பகலில் இப்பூங்காப் புலிகள் வேட்டைக்குச் செல்லாது அமைதியாக உள்ளது
வங்கப் புலிகளுடன், இந்தியச் சிறுத்தைகளும் இப்பூங்காவில் உள்ளது.
சித்வான் தேசியப் பூங்காவில் 200 முதல் 250 வரையிலான சோம்பேறிக் கரடிகள் உள்ளது. மேலும் நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன. 2011இல் நடந்த ஆய்வுகளின் படி, சித்வான் தேசியப் பூங்காவில் செந்நாய்கள், தங்க நிற குள்ள நரிகள், மீன்பிடிப் பூனைகள், சிறுத்தைப் பூனைகள், பெரிய மற்றும் சிறிய ஆசிய மரநாய்கள், நண்டை உண்ணும் கீரிகள், மஞ்சள் நிற தொண்டை கீரிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டு முடிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 544ஆக உயர்ந்துள்ளது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களைக் காக்க, இங்கிருந்து நாட்டின் பிற தேசியப் பூங்காக்களுக்கு, இன வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் சித்வான் தேசியப் பூங்காவில் ஆசியக் காட்டு யானைகள், காட்டெருதுகள் அதிகமாக உள்ளது. காட்டுப்பன்றிகள், கலைமான்கள், குரைக்கும் மான்கள், புள்ளிமான் கூட்டங்கள், புல்வாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மறிமான்கள், செம்முகக் குரங்குகள், அனுமார் குரங்குகள், இந்திய எறும்பு தின்னிகள், இந்திய முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில்கள், பல இன காட்டு முயல்கள் மற்றும் தேவாங்குகள் காணப்படுகின்றன.
இப்பூங்காவில் 543 இன பறவைகள் 2006ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் மூன்றில் இரண்டு பங்கு பறவைகள் உலக அளவில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளவைகள் ஆகும். அரிய வகை சிட்டுக் குருவிகள், தேன்சிட்டு பறவைகள், பெருந்தலை கிளிகள், கானாங்கோழிகள், காட்டுக் கோழிகள், இந்திய மயில்கள் மற்றும் உலக அளவில் அருகி வரும் புள்ளிக் கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இப்பூங்கா செயல்படுகிறது.
நேபாளத்தின் மிகப்பிரபலமான சித்வான் தேசியப் பூங்கா, அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சித்வான் தேசியப் பூங்காவில் சுற்றுலா குழுவினர் தங்கும் விடுதிகள், உணவகங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை காண்பதற்கு தேவையான சிற்றுந்துகள் மற்றும் யானைகள் உள்ளன. மேலும் படகோட்டும் பயிற்சி செய்வதற்கு தேவையான படகுகளும் உள்ளன. சூலை 2012 முதல் பூங்காவில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் அரசு ஆணையின்படி மூடப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வெளியே 350 முதல் 400 வரையிலான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தற்போது உள்ளன. மேலும் சுற்றுலா குழுவினர் தேசியப் பூங்காவைச் சுற்றி பார்க்க 800 யானைகள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில் Chitwan National Park தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |