டாய் மலை (Mount Tai, சீனம்: ; பின்யின்: ) சீனாவின் சான்டோங் மாநிலத்தில் டாய் யன் நகரத்தின் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, பண்பாட்டு மையமான மலையாகும். பச்சைக்கல் பேரரசர் சிகரம் (எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: ; பின்யின்: Dǐng) இந்த மலையின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது உயரம் பொதுவாக 1,545 மீற்றர்கள் (5,069 ft) எனக் குறிப்பிடப்படுகின்றது; ஆனால் சீன மக்கள் குடியரசு இதன் உயரத்தை 1,532.7 மீற்றர்கள் (5,029 ft)ஆகக் குறித்துள்ளது.
சீனாவின் ஐந்து புனித மலைகளில் ஒன்றாக டாய் மலை உள்ளது. இது சூரியோதயம், பிறப்பு, மீட்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது;ஐந்து மலைகளில் இதுவே முதலாவதாக கருதப்படுகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டாய் மலை புனிதத்தலமாக இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீனாவின் சடங்கு மையங்களில் முதன்மையானதொன்றாகவும் இருந்துள்ளது.
டாய் மலை மேற்கு சான்டோங் மாநிலத்தில் டாய் யன் நகருக்கு வடபுறத்தில் மாநிலத் தலைநகர் ஜினானுக்கு தெற்கே அமைந்துள்ளது. மலையின் அடிவாரம் கடற் மட்டத்திற்கு 150 to 1,545 மீற்றர்கள் (492 to 5,069 ft) உயரத்தில் 426 சதுர கிலோமீற்றர்கள் (164 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியான பச்சைக்கல் பேரரசர் சிகரம் கடற் மட்டத்திலிருந்து 1,532.7 மீற்றர்கள் (5,029 ft) உயரமானது; இதன் ஆட்கூறுகள்: 36° 16′வ & 117° 6′கி.
பழைய கற்காலத்திலிருந்தே மக்கள் இங்கு இருந்திருக்கக்கூடிய சான்றுகள் உள்ளன. புதிய கற்காலத்திலிருந்து இவர்கள் கூட்டாக குடியிருப்புகளில் ஏற்படுத்தியிருக்கலாம் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இக்காலத்தில் மலைக்கு அருகே இரு நாகரிகங்கள் வளர்ந்து வந்தன:தெற்கே டேவென்கோ நாகரிகமும் வடக்கே லோங்ஷான் நாகரிகமும் ஆகும்.
சியா மன்னர்கள் காலத்தில் (கி.மு. 2070–1600 ) பழைய கிங்சோவின் எல்லைகளுக்குள் இருந்த இந்த மலை டேய் மலை (சீனம்: 岱山; பின்யின்: Dài Shān) என அழைக்கப்பட்டு வந்தது.
டாய் மலையை சமயரீதியாக புனித மலையாக கருதி வழிபடுதல் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே துவங்கியது; சாங் மன்னராட்சி (கி.மு. 1600–1046 ) முதல் சிங் அரசர்கள் (1644–1912) வரை இப்பழக்கம் நீடித்தது. சிறுது காலத்தில் இந்த வழிபாடு அலுவல்முறையான அரசச் சடங்காக மாறியது; பேரரசர் வானோர்களுக்கு சிகரத்திலும் புவியிலுள்ளோருக்கு அடிவாரத்திலும் அஞ்சலி செலுத்துமிடமாக ஆயிற்று. இவை பெங் (சீனம்: ; பின்யின்: ) என்றும் ஷான் (சீனம்: ; பின்யின்: ) என்றும் அறியப்பட்டன. இந்த இரு பலிகளும் கூட்டாக ஃபெங்ஷான் (சீனம்: ; பின்யின்: ) எனவும் குறிப்பிடப்படுகின்றன. இச்சடங்கின் அங்கமாக கற்றளியில் பொறிப்பது பேரமைதி பெற்றதற்கான அடையாளமாக கருதப்பட்டது.
சவு மன்னராட்சியில் (கி.மு 1046–256 ) உணவும் பச்சைக்கல் சடங்குகளும் படைக்கப்பட்டன. இவற்றைச் சரியானதொரு வடிவத்தில், சமயப் புத்தகங்களில் விவரித்தபடி,அமைத்து புதைக்கப்படும். மன்னரால் படைக்கப்படும் பலிகளை மட்டுமே டாய் மலை ஏற்றுக்கொள்ளும் என நம்பப்பட்டது; இதனை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி படையல்களை வழங்குவதை தவறு என கன்பூசியஸ் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். போரிடும் நாடுகள் காலத்தில் (கி.மு 475–221 ), படையெடுப்பிற்கு எதிராக தன்னைக் காத்துக்கொள்ள, கி அரசு 500 கிலோமீற்றர்கள் (310 mi) நீளமுள்ள அரணை கட்டியது; இதன் இடிபாடுகளை இன்றும் காணலாம். அருகிலுள்ள நகரத்திற்கு டாய் மலை நிலைத்திருப்பது போல நாடும் நிலைத்திருக்கும் என பொருள்படும்படியாக டாய்'யன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கி.மு 219 இல் சின் ஷி ஹுவாங், சீனாவின் முதல் பேரரசர் இம்மலைச் சிகரத்தில் சடங்கை நடத்தி தனது பேரரசின் ஒற்றுமையை நிலைநாட்டி பதித்த கற்றளி இங்குள்ளது. ஆன் மன்னராட்சியில் (கி.மு 206 –கி.பி 220 ), பெங்,ஷான் படையல்கள் மிகவும் உயர்ந்த படையல்களாக கருதப்பட்டன.
கி.பி 666இல் கோசோங் பேரரசர் நடத்திய இச்சடங்குகளில் சப்பான், இந்தியா,பெர்சியா, கோகுர்யோ,பேக்யே, சில்லா,துருக்கி, கோடான், கெமர்,மற்றும் உமையா கலீபகம் நாட்டுச் சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.
1987இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் டாய் மலையை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. 2003இல் 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சென்றுள்ளனர். பண்பாட்டு நினைவகங்களையும் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க இடிபட்டக் கட்டிடங்களையும் புதுப்பித்தல் திட்டமொன்று அக்டோபர் 2005இல் நிறைவடைந்தது. இங்கு நடைபெறும் சிறப்புச் சடங்குகளுக்காக பெரிதும் அறியப்படும் டாய் மலைக்கு அகவெழுச்சி நாடி பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் வந்துள்ளனர். பல பெரிய கோவில்கள், கற்றளிகள், கல்வெட்டுக்கள் நிறைந்துள்ள இந்த மலை பௌத்தம் மற்றும் தாவோயிய சமயங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.