தாய்நாடு அழைக்கிறது (உருசியம்: Родина-мать зовёт! Rodina-Mat' zovyot!), அல்லது தாய் தாய்நாடு, தாய் தாய்நாடு அழைக்கிறது, அல்லது சுருக்கமாக தாய்நாடு, அல்லது மமாயேவ் சின்னம் என்பது ரசியாவின் வோல்கோகிராட்டிலுள்ள மமாயேவ் குர்கனிலுள்ள ஒரு சிலையாகும். இது ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது. இது யெவ்ஜெனி வுசெடிச் எனும் சிற்பியாலும், நிகோலாய் நிகிடின் எனும் கட்டுமானப் பொறியியலாளராலும் வடிவமைக்கப்பட்டது. 1967ல், உலகின் மிகப்பெரிய சிலையாக பிரகடனப்படுத்தப்பட்ட இதுவே மிகப்பெரிய சிலையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இறுதிச் சமயச்சார்பற்ற சிலையாகும். இதற்குப் பிறகு மிகப்பெரிய சிலையாக பிரகடனப்படுத்தப்பட்டவை அனைத்தும் பௌத்த சமயம் சார்ந்த சிலைகளாகும். இதற்குப் பின்னரான உயரமான சிலைகளுடன் ஒப்பிடும் போது, தாய்நாடு அழைக்கிறது பொறியியல் ரீதியில், குறிப்பிடத்தக்களவு சிக்கல் தன்மை வாய்ந்தது. இதற்குக் காரணம், அதன் தோற்றமாகும். இதன் வலது கை ஒரு வாளை உயர்த்திப் பிடித்திருப்பதுடன், இதன் இடது கை அழைக்கும் பாவனையில் நீண்டிருக்கிறது. இதன் கட்டுமானத்துக்காக கம்பிவடத்துடனான முன்தகைப்புக் காங்கிறீற்றுக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பம் நிகிடினின் இன்னொரு கட்டமைப்பான மொஸ்கோவிலுள்ள ஒஸ்டாங்கினோ கோபுரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1967ல் இந்நினைவுச் சின்னம் சமர்ப்பணம் செய்யப்பட்டபோது இதுவே உலகின் உயர்ந்த சிலையாக இருந்தது. இதன் வாள் முனையிலிருந்து அடிப்பீடம் வரையிலான உயரம் 87 மீற்றர்களாகும் (279 அடிகள்). இதன் உருவம் 52 மீற்றர்களும் (170 அடிகள்), கையிலுள்ள வாள் 33 மீற்றர்களும் (108 அடிகள்) ஆகும். மலையின் அடிப்பகுதியிலிருந்து சிலை வரையான இருநூறு படிக்கட்டுக்களும், ஸ்டாலின்கிராட் போர் நடைபெற்ற 200 நாட்களையும் குறிக்கின்றன. இதன் முக்கிய சிற்பி யெவ்ஜெனி விசெடிச் ஆவார். மேலும் 7,900 தொன்கள் (7,800 long tonகள்; 8,700 short tonகள்) கொன்கிறீற்றுச் சிலையின் குறிப்பிடத்தக்க கட்டுமானப் பொறியியல் சவால்கள் நிகோலாய் நிகிடினால் கையாளப்பட்டது. இச்சிலை வொல்கோகிராட் ஒப்லாஸ்தின் தற்போதைய கொடியிலும் சின்னத்திலும் காணப்படுகிறது.
தலைப்பிலுள்ள "தாய் தாய்நாடு" எனும் சொல் மூலச்சொல்லில் காணப்படவில்லை. "தாய்நாடு" என்பதற்கான ரசிய வார்த்தையான "Родина" என்பது "பிறப்பு" என்பதிலிருந்து உருவானதாகும். எனவே இதனை "பிறப்பிடம்" என மொழிபெயர்க்கலாம். இதன் மாற்று மொழிபெயர்ப்பாக நான்பிறந்த என் தாய்நாடு என்னை அழைக்கிறது எனக் கொண்டாலும், தாய்நாடு அழைக்கிறது என்பது மொழி வழக்கில் சரியானதாகக் கொள்ளப்படலாம்.
இந்தச் சிலைக்கான மாதிரியாக இருந்த இந் நகரவாசியான வலென்டினா இசோடோவா என்பவர் சிலையுடனான அவரது ஒப்புமை காரணமாக இன்றும் அறியப்படுகிறார். இவர், 1960களின் முற்பகுதியில் ஞாபகார்த்தக் கட்டிடத்தில் வேலைசெய்யும் ஓவியரான லெவ் மைஸ்ட்ரெங்கோவினால் மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டார்.
சில மூலங்களின்படி, இச்சிலைக்கான தூண்டுதல் சமோத்ரேசின் சிறகுள்ள வெற்றி[] எனும் சிலையிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்குக் காரணம் இச்சிலை தனது துணியினை சிறிதளவு விரித்திருப்பதனாலாகும். சோவியத் ஒன்றியத் தளபதியான வசிலி இவனோவிச் சுய்கோவ் என்பவரும், ஸ்டாலின்கிராட் போரில் 225 அச்சு நாட்டு வீரர்களைக் கொன்ற பிரபல சோவியத் குறிசுடுனரான வசிலி சாய்த்செவ் என்பவரும் இச்சிலையின் அருகே புதைக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கீழ் நீர் மட்ட மாறல்களால் இச்சிலையின் அத்திவாரம் அசைவதன் காரணமாக, இச்சிலை தற்போது சாய்ந்துகொண்டுள்ளது. இச் சாய்வு தற்போது மேலும் மோசமான அளவுக்கு வந்துள்ளது. இச்சிலை அதன் அத்திவாரத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. அதன் நிறையின் காரணமாகவே அது அவ்விடத்தில் நிற்கிறது. இது 20 சென்ரிமீற்றர்கள் நகர்ந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் இச்சிலை அபாயக் கட்டத்தில் இல்லை எனக் கூறினாலும், பாதுகாப்பு மற்றும் மீளமைப்புப் பணிகள் 2010ல் ஆரம்பமாயின.
விக்கிமீடியா பொதுவகத்தில் The Motherland Calls தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |