மசாய் மாரா என்பது தென்மேற்குக் கெனியாவில் உள்ள பெரிய வேட்டை விலங்கு ஒதுக்ககம் ஆகும். இது தான்சானியாவில் உள்ள செரெங்கெட்டி தேசியப் பூங்கா வேட்டை விலங்கு ஒதுக்ககத்தின் வடதிசையில் உள்ள தொடர்ச்சி ஆகும். இப் பகுதியை மரபுவழித் தாயகமாகக் கொண்ட மசாய் இன மக்களின் பெயரிலேயே இவ்வொதுக்ககத்துக்குப் பெயர் ஏற்பட்டது. .இது, வழமைக்கு மாறாக அதிக அளவில் காணப்படும் புலிகள், சிங்கங்கள், வேட்டை விலங்குகள் போன்றவற்றுக்கும், ஆண்டுதோறும் இடம்பெறும் வரிக்குதிரை, மற்றும் பல காட்டு விலங்குகளின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை இடம்பெறும் இந்த இடப்பெயர்வு அதன் அளவு காரணமாக "பெரும் இடப்பெயர்வு" என அழைக்கப்படுகின்றது..
மசாய் மாரா தேசிய ஒதுக்ககம் தென் மேற்குக் கெனியாவில் 1510 சதுர கிலோமீட்டர் பகுதியில் பரந்து காணப்படுகின்றது. இது 25,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மாரா-செரெங்கெட்டி சூழ்நிலை மண்டலத்தின் வடக்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. மசாய் மாராவின் தெற்கு எல்லையில் செரெங்கெட்டி பூங்காவும், மேற்கில் சிரியா செங்குத்துச் சரிவும், ஏனைய திசைகளில் மசாய் மேய்ச்சல் வெளிகளும் உள்ளன. இப் பகுதியின் மழை நீர், த சாண்ட், தாலெக், மாரா ஆகிய ஆறுகளூடாக வடிந்து செல்கிறது. பற்றைகளும், மரங்களும் பெரும்பாலான வடிகால்களின் இரு பக்கங்களிலும் காணப்படுவதுடன், குன்றுகளின் சரிவுகளையும், அவற்றின் உச்சிகளையும் மூடிக் காணப்படுகின்றன.
"வைல்ட்பீஸ்ட்" எனப்படும் ஒருவகைக் காட்டு மாடுகள், வரிக்குதிரைகள், தாம்சன் கசெல் ஆகிய விலங்குகள் யூலை தொடக்கம் அக்டோபர் வரை, தெற்கேயுள்ள செரெங்கெட்டிச் சமவெளிகளிலிருந்தும், வடகிழக்கில் உள்ள மேய்ச்சல் வெளிகளில் உள்ள லொயிட்டா சமவெளியிலிருந்தும் வந்து மாரா ஒதுக்ககத்தில் வாழுகின்றன. இவை தவிர மேற்படி விலங்குகளின் குழுக்கள் இவ்வொதுக்ககத்தில் நிரந்தரமாகவும் வாழ்கின்றன.
"பெரும் ஐந்து" எனப்படும் பெரிய ஐந்து விலங்குகளில் எல்லாமே மாரா ஒதுக்ககத்தில் உள்ளன. கறுப்புக் காண்டாமிருகங்கள் அழியும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன. 2000 ஆண்டு மதிப்பீட்டின்படி இவ்வகையில் 37 விலங்குகள் மட்டுமே காணப்படுகின்றன. நீர்யானைகள் பெரிய குழுக்களாக மசாய் மாரவிலும் தாலெக் ஆற்றுப் பகுதியிலும் உள்ளன. சீத்தாப் புலிகளும் இங்கே காணப்படுகின்றன. எனினும் அவையும் அழியும் ஆபத்தை எதிர் நோக்குகின்றன. இவற்றின் பகற்கால வேட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் இடையூறு செய்வதனாலேயே இது நிகழ்வதாகச் சொல்லப்படுகின்றது. .