மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 metres (31 ft) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 metres (130 ft) உயரமும், 30 metres (98 ft) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-metre (2,300 ft) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது. இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் (soapstone) 1922-இல் இருந்து 1931-குள் கட்டட்ப்பட்டதாகும்.
கொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான பேத்ரோ மரிய பாஸ் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரிய போது இடம்பெறுகின்றது. இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவில்லை. 1889-இல் பிலேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.
இரண்டாம் முறையாக இம்மலையின் மிது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்னும் கோரிக்கை 1921-இல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடம் எழுந்தது. பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.
இம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலை முதலில், சிலுவையோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ உறுவாக்கக்ப்பட இருந்தது, ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
உள்ளூர் பொறியாளர் ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால் சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி பாவுல் லான்டோஸ்கியினால் செதுக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழாமினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது. நீடித்த குணங்கள் மற்றும் பயன்படுத்த எளிதாக இருப்பதர்க்காகவும் வெளிப்புறத்தில் சோப்புக்கல் பூச்சு இணைக்கப்பட்டது. கட்டுமானம் 1922 இலிருந்து 1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு ஐஅ$250000 ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது..
அக்டோபர் 2006-இல், இச்சிலையின் 75ஆவது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது.
15 ஏப்ரல் 2010 அன்று சிலையின் தலையிலும் வலது கையின் மீதும் கிராஃபிட்டியால் கிறுக்கப்பட்டிருந்தது. ரியோ நகரின் மாநகராட்சித் தலைவர் இதனை நாட்டுக்கே எதிரான குற்றம் எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு தருவோர்க்கு R$ 10,000 பரிசுத்தோகையினையும் அறிவித்தார். ரியோ நகரின் இராணுவப்படை காவல்துறையினர் பவுலோ சொசுசா என்பவரை சந்தேகத்தின் பேரின் கைது செய்துள்ளனர்.
சூலை 7, 2007 அன்று லிஸ்பனில் நடந்த நிகழ்வின் போது, இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது. இச்சிலை உலக அதிசயப்பட்டியலில் இடம் பெற, பெருநிறுவன ஆதரவாளர்கள் பலர் முயன்றனர்.
இச்சிலை பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக் களமாகமாக 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.
1990-இல் ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம், ஊடக நிறுவனமான ரேடி கிலோபோ, எண்ணெய் நிறுவனமான ஷெல் டோ பிரேசில், பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக்களங்களின் பராமரிப்புச் செயலகம் மற்றும் ரியோ டி ஜனேரோ நகர அரசும் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.
2003-ஆம் ஆண்டில் இச்சிலையினை எளிதில் சென்றடைய மின்தூக்கிகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டன.
10 பெப்ரவரி 2008-இல் இச்சிலை தலை மற்றும் கரங்களில் மின்னல் தாக்கியதால் பாதிப்புக்கு உள்ளானது. நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின. ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம் [] மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.
இதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது
இச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமானது ஆகும்.
மீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. மேலும் இச்சிலை பல நிகழ்பட விளையாட்டுகளிலும், நாடகங்களிலும், படங்களிலும், ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.
விக்கிமீடியா பொதுவகத்தில் Cristo Redentor do Rio de Janeiro தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |