சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) (சமசுகிருதம்: स्वयम्भूनाथ स्तुप) நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய கால பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்த பயணிகளுக்கு புனிதமான மலைக் கோயிலாகும்.
சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் பல கிறித்து பிறப்பிற்கு முன், லிச்சாவி அரச குலத்தினரால் எழுப்பப்பட்டதாகும். சுயம்புநாதர் கோயில் வளாகத்தில், புத்த விகாரம், தூண், அருங்காட்சியகம், நூலகம் கொண்டுள்ளது.
சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் உணவு விடுதிகள், கடைகள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம். தெற்கில் உள்ள மலைச்சாலை வழியாக சிற்றூந்துகளில் கோயிலை அடையலாம்.
படிக்கட்டுகள் வழியாக செல்லும் போது முதலில் பெரிய அழகிய வஜ்ராயுதத்தை காணலாம். பின்னர் பெரிய வெள்ளை நிற அரைக் கோள வடிவ கோயிலின் கூரை மற்றும் நான்கு புறத்திலும் புத்தரின் கண்கள் வரையப்பட்ட தூணைக் காணலாம்.
வஜ்ஜிரயான பௌத்த சமயப் பிரிவின் நேபாள நேவார் பௌத்த மரபின்படி, பௌத்தநாத் வளாகம், உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல் என்ற முறைப்படி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் பௌத்த மற்றும் இந்து தத்துவப் பிரிவுகளின் களமாக திகழ்கிறது.
சுயம்பு புராணக் கதையின்படி, ஒரு காலத்தில் காத்மாண்டு சமவெளி முழுமையும் தாமரை மலர்களால் நிறைந்த நீரால் சூழப்பட்டு இருந்தது. பின்னர் இறைவன் அருளால் தானாகவே (சுயம்பு) இச்சமவெளி தோண்றியதால், இத்தலத்திற்கு சுயம்புநாதர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இத்தலத்தில் தாமரை மலர் ஸ்தூபியாக மாறியது.
சுயம்புநாதர் கோயிலை குரங்குகளின் கோயில் (Monkey Temple) என்றும் அழைப்பர். இக்கோயிலில் வட மேற்குப் பகுதியில் ஆண்டு முழுவதும் குரங்குகள் வசிப்பதால் இப்பெயராயிற்று. இக்குரங்குகள் புனித விலங்காக மக்கள் கருதுகின்றனர். இங்கிருந்து மக்களுக்கு ஞான உபதேசத்தை செய்து கொண்டிருந்த மஞ்சுஸ்ரீ என்ற போதிசத்துவரின் தலையில் இருந்த பேன்களே, அவர் இறந்த பின், குரங்குகளாக மாறியது என்று போதிசத்துவர் கதைகள் கூறுகிறது.
நேபாளத்தில் சுயம்புநாத் கோயில், மிகவும் தொன்மையான பண்பாட்டு பாரம்பரியமிக்க பௌத்த சமயக் களமாகும். கோபால ராஜ வம்சாவளி என்ற நூலில், சுயம்புநாத் கோயிலை மன்னர் மானதேவரின் (கி பி 464 – 505) பாட்டனார், மன்னர் விருசபதேவரின் காலத்தில், கி பி ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது.
அசோகர் கி மு மூன்றாம் நூற்றாண்டில், இவ்விடத்தில் ஒரு புத்த விகாரம் மற்றும் நினைவுத் தூணையும் எழுப்பினார். பின்னாட்களில் அவைகள் காலத்தில் அழிந்து போயிற்று.
பௌத்த தலமாக சுயம்புநாதர் கோயில் இருப்பினும், இந்துக்களும் இக்கோயிலை தங்களது புனித தலமாக கருதி வழிபடுகின்றனர். பல இந்து சமய மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி மேற்கொண்டுள்ளனர். காட்மாண்ட் சமவெளியின் மன்னர் பிரதாப மல்லர், 17ஆம் நூற்றாண்டில், இக்கோயிலின் கிழக்கில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தார்.
1921ஆம் ஆண்டிற்குப் பின்னர், பௌத்தநாத் கோயிலின் தூண் மே 2010இல் சீரமைத்துக் கட்டப்பட்டது. 1500 ஆண்டுகளில் பௌத்தநாத் தூண் 15 முறை சீரமைத்து கட்டப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் திபெத்திய பௌத்த இயக்கத்தால், பௌத்தநாத் விகாரையின் கூரை 2008ஆம் ஆண்டில் தங்க மூலம் பூசப்பட்ட செப்புத் தகடுகளால் வேயப்பட்டது.
பௌத்தநாதர் கோயில் வளாகம், 2015 நேபாள நிலநடுக்கத்தில் பலத்த சேமடைந்தது.
பௌத்தநாதர் விகாரத்தின் கூரையின் மையத்தில் அமைந்த தூணின் நான்கு புறங்களில் காணக்கூடிய புத்தரின் கண்கள் வரையப்பட்டுள்ளது. ஐங்கோண வடிவ தோரண வாயில்களின் நாற்புறங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் உட்புறத்தில் கைவினைஞர்களால் கலைநயத்துடன் கூடிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
சுயம்புநாதரின் கோள வடிவ மேற்கூரை அனைத்துப் பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது. ஞானம் மற்றும் கருணை என்ற இரண்டு கண்கள் மூலம் ஒரு மனிதன் உலகத்தளையிலிருந்து விடுபட்டு நிர்வாணம் அடைய உதவுகிறது என்பதை தூபில் உள்ள இரண்டு கண்கள் உணர்த்துகிறது. தூணின் உச்சியில் உள்ள 13 கொடுமுடிகள், புத்த நிலையை அடைவதற்கான 13 படி நிலைகளை எடுத்துரைக்கிறது. தூணின் நாற்புறங்களில் ஐந்து புத்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஐந்து புத்தர் சிற்பங்கள், ஐந்து தந்திரங்களை எடுத்துரைக்கிறது.
சுயம்பு புராணம் என்பது பௌத்த சாத்திர நூலாகும். இப்புராணம் காட்மாண்டு சமவெளி உருவான வரலாறும், வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது. கௌதம புத்தர் காட்மாண்டுக்கு வருகை புரிந்த நிகழ்வையும் விளக்குகிறது. மேலும் பௌத்த சமயத்தில் முதல் மற்றும் இரண்டாம் புத்தர்களின் குறிப்புகளைக் கொண்டுள்ளது.
புத்த பூர்ணிமா மற்றும் பிப்ரவரி - மார்ச் திங்களில் வரும் லோசர் பண்டிகை சிறப்பானதாகும். மழைக் காலம் முடிந்த பின் ஆகஸ்டு - செப்டம்பர் மாதத்தில் வரும் குன்லா பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நேபாள நிலநடுக்கத்தின் போது, சுயம்புநாத் வளாகமும் பலத்த சேதமடைந்தது.
விக்கிமீடியா பொதுவகத்தில் Swayambhunath தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |