பொதுவாக எல் எசுக்கோரியல் (El Escorial) என அறியப்படும் சான் லோரென்சோ டெ எல் எசுல்லோரியல் அரச களம் என்பது, இசுப்பெயினின் தலைநகரமான மாட்ரிட்டில் இருந்து 45 கிலோமீட்டர் தென்மேற்குத் திசையில் உள்ள சான் லோரென்சோ டி எல் எசுக்கோரியல் என்னும் நகரத்தில் அமைந்துள்ள, இசுப்பெயின் அரசரின் வாழிடம் ஆகும். அரச களமான இது, துறவிமடம், பசிலிக்கா, அரச மாளிகை, பந்தியன், நூலகம், அருங்காட்சியகம், பல்கலைக்கழகம், பள்ளி, மருத்துவமனை எனப் பலவாறாகப் பயன்பட்டுள்ளது. இது எல் எசுக்கோரியல் நகரத்தில் இருந்து 2.06 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எல் எசுக்கோரியல் பெரும் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கட்டிடத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று அரச துறவிமடம், மற்றது முன்னதில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள லா கிரஞ்சில்லா டி லா பிரெசுனேடா எனப்படும் அரச வேட்டைக்கான தங்குமிடமும் துறவிகள் வெளியே தங்குவதற்கான இடத்தையும் உள்ளடக்கியது. இந்தக் களங்கள் இரட்டைத் தன்மை வாய்ந்தவை. அதாவது, 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் பல இடங்களில், இசுப்பானிய அரச அதிகாரமும், இசுப்பெயினின் உரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கமும் ஒரே கட்டிடக்கலை வெளிப்பாட்டைக் காட்டி நின்றன. ஏல் எசுக்கோரியல் ஒரு காலத்தில் அரசமாளிகையாகவும், துறவிமடமாகவும் செயற்பட்டது. இது முன்னர் செயின்ட் செரோம் சபைக் குருமாரின் சொத்தாக இருந்த இது இப்போது செயின்ட் அகசுத்தீன் சபையினரின் துறவிமடமாக உள்ளது. இது "பன்னிரண்டாம் அல்போன்சோ அரச கல்லூரி" எனப்படும், மாணவர்கள் தங்கிக் கல்வி பயிலும் ஒரு பள்ளியாகவும் உள்ளது.
16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிர் வினையாக இசுப்பெயினின் இரண்டாம் பிலிப்பு, தனது நீண்ட ஆட்சிக் காலத்தின் (1556–1598) பெரும் பகுதியையும், அள்ள அள்ளக் குறையாததுபோல் தோன்றிய புதிய உலகில் இருந்து கிடைத்த செல்வத்தின் பெரும் பகுதியையும் இந்த மாற்ற அலையைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பயன்படுத்தினார். இவரது தொடர்ச்சியான முயற்சிக்கு நீண்ட காலத்தில் பகுதியாக வெற்றி கிடைத்தது எனலாம். ஆனாலும், இந்த உத்வேகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே, எல் எசுக்கோரியல் தொகுதியைக் கட்டுவதற்கு பிலிப்பு முடிவு செய்தபோதே, வெளிப்பட்டது.
எல் எசுக்கோரியலை வடிவமைப்பதற்கு, யுவான் பௌட்டிசுத்தா டி தொலேடோ என்னும் கட்டிடக்கலைஞரை பிலிப்பு பணிக்கு அமர்த்தினார். யுவான் பௌட்டிசுத்தா உரோமிலும், நேப்பிள்சிலும் கழித்தார். உரோமில் இருந்த போது சென் பீட்டர் பசிலிக்காவின் கட்டிட வேலைகளில் பணியாற்றியுள்ளார். நேப்பிள்சில் அவர் அரசப் பிரதிநிதியின் கீழ்ப் பணிபுரிந்தார். இந்த அரசப் பிரதிநிதியின் பரிந்துரையினாலேயே பௌட்டிசுத்தா அரசரின் கவனத்தை ஈர்த்தார். பிலிப்பு 1559 இல், பௌட்டிசுத்தாவை அரச கட்டிடக்கலைஞராகப் பணிக்கு அமர்த்தினார். கிறித்தவ உலகத்தின் மையம் என்ற இசுப்பெயியின் வகிபாகத்துக்கான நினைவுச் சின்னமாக எல் எசுக்கோரியலை இருவரும் சேர்ந்து வடிவமைத்தனர்.
1984 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி, எல் எசுக்கோரியலின் சான் லோரென்சோவை ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெசுக்கோ அறிவித்தது. இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். மாட்ரிட்டில் இருந்து ஒரு நாள் சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் இங்கே வருகிறார்கள். ஆண்டுக்கு 500,000 பேர் எல் எசுக்கோரியலைப் பார்க்க வருகின்றனர்.