ஆட்ரியனின் சுவர் (Hadrian's Wall, ஹாட்ரியனின் சுவர்) எனப்படுவது வடக்குப் பிரித்தானியாவில் கிபி 122 இல் உரோமர்களால் கட்டப்பபட்ட ஒரு இராணுவத் தடுப்புச் சுவர் அமைப்பாகும். இதை ஏட்ரியன் எனப்படும் உரோமப் பேரரசன் கட்டினான். வட பிரித்தானியாவில் பிற்காலத்தில் இதே போன்ற அந்தனி சுவர் எனப்படும் சுவரும் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் உரோமப் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தடுக்கப் பயன்பட்டாலும் இச்சுவரில் உள்ள கதவுகள் மூலம் பயனிக்கும் வியாபாரிகளிடம் வரி போன்றவற்றை வசூலிக்கவும் இந்தச் சுவர் வசதியாக அமைந்துள்ளது.
இந்தச் சுவரின் பெரும் பகுதி இன்றும் மீதமாக உள்ளதைக் காணலாம். வட பிரித்தானியாவில் இன்று இந்தச் சுவரின் எச்சங்கள் பிரபலமாக ஒரு உல்லாசப் பயனிகளைக் கவரும் இடமாக மாறியுள்ளது. 1987 இல் யுனெஸ்கோ நிறுவனம் இந்தச் சுவர் அமைந்த பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.
கி.பி 122 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நீடித்தது. கிழக்குப் பக்கமாக ஆரம்பித்த கட்டுமானப்பணி மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. ஹேட்ரியன் சுவர் சுமார் 120 கி.மீ நீளமாக இருப்பதுடன் அகலமானது அருகில் கட்டுமானத்திற்கு பொருட்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபட்டு உள்ளது.
இந்தச் சுவர் கட்டப்பட்டதற்கான சரியான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லாத போதும் பல்வேறு காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றது. ஜரோ எனும் இடத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் படி கி.பி 119 இல் ஆட்ரியனின் பிரித்தானியப் பயணத்திற்கு முன்னரே இந்த சுவரை நிர்மானிக்கத் தீர்மானித்ததாகத் தெரிகின்றது. இதன்படி இராச்சியத்தை ஒருங்கிணைக்கக் கடவுள் கட்டளைப்படி இந்த சுவர் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கி.பி 122 இல் ஆட்ரியன் பிரித்தானியாவிற்குப் பயணித்த போது இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதும் அவர் நிகழ்ச்சி நிரலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவரில் பாதுகாப்புப் பணிக்காக ரோமப் பேரரசின் படையணியான லீஜனயர் அல்லாத படைவீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 9000 வீரர்கள் இந்தச் சுவரில் பணியாற்றியுள்ளதுடன் இவர்களில் காலாட்படை, குதிரைப்படைகளும் உள்ளடங்கும்.