அல்-அசார் பல்கலைக்கழகம் (Al-Azhar University, " (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்") எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் பாத்திம கலீபகத்தாரால் இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் ஏரணம், இலக்கணம், கவிதை ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அராபிய இலக்கியத்திற்கும் இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.எகிப்தில் பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான பல்கலைக்கழகமாக இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.
இது கெய்ரோவிலுள்ள அல்-அசார் மசூதியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இசுலாம் சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் முஸ்லிம் தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் (ஃபத்வாகள்) வழங்குகின்றனர்.
விக்கிமீடியா பொதுவகத்தில் அல்-அசார் பல்கலைக்கழகம் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |