சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஹைதிராபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பள்ளிவாசல் ஆகும். இது ஹைதிராபாத்தின் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. தற்போது இது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு, முகம்மது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது.
முகம்மது குலி குதுப் ஷா என்பவர் இதன் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார். குதுப் ஷாவின் முதன்மை அமைச்சராய் இருந்த மிர் மொமின் அஸ்டாரபடி (Mir Momin Astarabadi) இதன் வடிவமைப்பிலும் ஹைதிராபாத் நகர வடிவமைப்பிலும் முக்கிய பங்காற்றினார்.. பெர்சியாவிலிருந்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எனவே இது இந்திய இஸ்லாமிய பாணி கட்டிட வகையில் காணப்படுகிறது. சார்மிரானது துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்டது.
இது இஸ்லாமிய பாணியில் அமைந்த கட்டிடம். சதுர வடிவமானது . ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் நீளமுடையது.நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளைக் கொண்டது. இவை இதைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.இது கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு.
2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வாழும் ஹைதிராபாத் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே பகதூராபத் எனும் இடத்தில் இதைப்போல் சிறிய அளவில் ஒரு சார்மினாரைக் கட்டினர்.
பாக்யலெக்ஷ்மி கோவிலின் மேல் தான் சார்மினார் கட்டப்பட்டது என்று ஒரு சர்ச்சை உண்டு. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என 'தி இந்து' நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.