சிஸ்டைன் சிற்றாலயம் (இலத்தீன்: Sacellum Sixtinum; ஆங்கிலம்:Sistine Chapel) என்பது வத்திக்கான் நகரில் உள்ள திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமான திருத்தூதரக அரண்மனையின் அருகே உள்ள ஒரு சிற்றாலயமாகும். இவாலயத்தில் அமைந்துள்ள சுதை ஓவியங்கள் இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர்களான மைக்கலாஞ்சலோ, சான்ட்ரோ பொத்திசில்லி, பின்ட்ருசியோ முதலியவர்களால் வரையப்பட்டவை.
திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸின் ஆட்சியில் மைக்கலாஞ்சலோ 1,100 m2 (12,000 sq ft) அளவு ஆலய உட்கூரை ஓவியங்களை 1508 முதல் 1512 வரை வரைந்தார். அதில் குறிப்பாக 1535 முதல் 1541 வரை அவர் வரைந்த இறுதி தீர்ப்பு ஓவியம் அவரின் படைப்புகளில் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றது.
திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸினால் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டதினால் அவரின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.
இவ்வோவியங்கள் 1482 இல் நிரைவுற்று, 15 ஆகஸ்ட் 1483 இல் முதன் முதலில் நான்காம் சிக்ஸ்துஸ் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியினை நிரைவேற்றி இவ்வாலயத்தை மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பனித்தார்.
நான்காம் சிக்ஸ்துஸின் காலத்திலேயே இவ்வாலயம் திருப்பீட அலுவல்களுக்கும் பிற கத்தோலிக்க சமய சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யும் திருப்பீடத் தேர்தல் அவை இவ்வாலயத்திலேயே கூடும் என்பது குறிக்கத்தக்கது. கி.பி 1878 முதல் நடைபெற்ற எல்லா திருப்பீடத் தேர்தல்களும் இங்கே தான் நிகழ்தன.