சுகோதாய் வரலாற்றுப் பூங்கா சுகோதாய், கம்பெயங் பெட், சி சட்சநலை ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சியாமின் முதல் அரசான சுகோதாய் அரசின் முக்கிய நகரங்கள் இவை. மூன்று நகரங்களும் பொதுவான நீர் கட்டமைப்பு மற்றும் சாலையால் இணைக்கப்பட்டிருந்தன.
சுகோதாய் நகரம் (தாய்: อุทยานประวัติศาสตร์สุโขทัย), வடக்குத் தாய்லாந்தில் 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுகோதாய் அரசின் தலைநகராக இருந்தது. சுகோதாய் வரலாற்றுப் பூங்கா நவீன சுகோதாய் நகருக்கு அருகில் உள்ளது. சுகோதாய் என்றால் ‘மகிழ்ச்சியின் விடியல்’ என்பது பொருளாகும். நகர மதில் கிழக்கு மேற்காக 2 கி.மீ வடக்கு தெற்காக 1.6 கி.மீ. மொத்தம் 70 சதுர கிலோமீட்டரில் 193 இடிபாடுகள் உள்ளன. இவற்றில் அரச மாளிகை மற்றும் 26 கோயில்களும் அடக்கம். இவற்றுள் வாட் மகாதத் கோயில் மிகப்பெரியதாகும்.
சி சட்சநலை பல பௌத்தவிகாரம்விகாரங்கள், கோயில்களைக் கொண்ட நகராகும். சுகோதாய் அரசின் ஆன்மீக நகராக இது விளங்கியது. களிமண்பாண்டம்|களிமண்பாண்டங்கள் ஏற்றுமதிக்கும் மிகப் பெயர்பெற்றது.
கம்பெயங் பெட் தெற்கு எல்லையில் இருந்தது. மிக முக்கிய ராணுவ தளமாகும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமில்லாமல் வர்த்தகப் போக்குவரத்தையும் உறுதி செய்தது. 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட இதனை, தாய்லாந்து அரசு பராமரித்து வருகிறது.
13 ஆம் நூற்றாண்டுக்கு முன் டாய் லூ மக்களின், கோயன்யாங் மற்றும் ஹெயோகம் அரசுகள் வடக்கு மேட்டுநிலங்களில் இருந்தன. சுகோதாய், கெமர் பேரரசின் கீழ் இருந்த லாவோவிடமிருந்தது. டாய் மக்கள் மேல் சாவோ பிரயா பள்ளத்தாக்கிற்கு படிப்படியாக நகரத் தொடங்கினர். சுகோதாய் மற்றும் சிரி சட்சாநலை நகரங்களின் ஆளுநர் போ குன் சிரி நாவ் நம்தோம் தலைமையில் 1180 முதல் சுகோதாய், தன்னாட்சி பெறத்தொடங்கியது. எனினும் லாவோவின் மாவன்கள் மீண்டும் தங்களின் அதிகாரத்திற்குக்கீழ் சுகோதாயைக் கொண்டுவந்தனர். போ குன் பாங்களாங்கவோ, போ குன் பாமெயுங் என்ற இரு சகோதரர்கள் மாவன்களிடமிருந்து 1239 இல் சுகோதாயை மீட்டனர். சுகோதாயைத் தலைநகராகக் கொண்டு பாங்களாங்கவோ என்ற சிரி இந்திராதித்யா பிரா ருவாங் வம்ச அரசாட்சியை நிறுவினார். அவரது அரசாட்சி நிறைவுறும்போது சாவோ பிரயா பள்ளத்தாக்கு முழுமைக்கும் சுகோதாய் அரசாங்கம் விரிவடைந்திருந்தது. சுகோதாய் அரசாங்கம் நிறுவப்படல் தாய்லாந்து நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
போ குன் பான் முவாங் மற்றும் அவரது சகோதரர் ராம்கம்கயெங் சுகோதாய் அரசாங்கத்தை விரிவுபடுத்தினர். ராம்கம்கயெங் தெற்கில் சுபன்னபும், சிரி தாம்னகொர்ன்(தாம்பரலிங்கா) ஆகியவற்றைக் கைப்பற்றினார். வடக்கில் பிரே, முவாங் சுவா(லுவாங் பிரபாங்) ஆகியவற்றை இணைத்தார். மேற்கில் வரேரு தலைமையிலான மாவன்களை பகன் அரசிடமிருந்து விடுவித்து, மர்டபன் அரசை உருவாக்கினார். தெரவடா புத்த சமயம் அரசு சமயமாக ஏற்கப்பட்டது. 1283 இல் தாய் மொழிக்கு வரி வடிவம் கொடுக்கப்பட்டது. சீன யுவான் அரசோடு அரசு முறையான தொடர்புகள் ஏற்பட்டன. சுகோதாய்யிலிருந்து சீனாவிற்கு பளிங்குப்பாண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ராம்கம்கயெங் இறப்பிற்குப்பின் சுகோதாய் அரசாங்கம் சிதறுண்டது. அவருக்குப்பின் லியோதாய் அரசரானார். அரசின் ஒவ்வொரு பகுதியும் தன்னாட்சி அறிவித்துக்கொண்டன. 1378 இல் அயூத்தியா சுகோதாய்யை பிடித்தது. லியோதாய் தன் தலைநகரை பிட்சனலோக்கிற்கு மாற்றிக்கொண்டார். 1584 இல் பர்மா-சியாம் போரின்போது, சுகோதாய் நகரை அயூத்தியா அரசாங்கம் கைவிட்டது.
சுகோதாய்யில் பின்பு மக்கள் குடியேறியபோதும், தொடர்ச்சியான பர்மா-சியாம் போர்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1793 இல் பாங்காக் தலைநகரானதும், பழைய சுகோதாய்க்கு 12 கிமீ தொலைவில் புதிய சுகோதாய் நிறுவப்பட்டது. இதனால், சுகோதாய் முழுமையாகக் கைவிடப்பட்டது. 1801 இல் புதிய தலைநகர் கோயில்களுக்காக சுகோதாய் கோயில்களிலிருந்த புத்தர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றுள் வாட் மகாதத் கோயிலின் 8 மீட்டர் (25 அடி) பிரா சிரி சாக்யமுனி புத்தர் சிலை முக்கியமானது. சுகோதாய்க்கு அருகில் உள்ள கம்பெயங் பெட், சி சட்சநலை ஆகியவை பிற முக்கிய பழங்கால நகரங்களாகும்.