சென். பீட்டரின் பசிலிக்கா, அதிகாரபூர்வமாக, இத்தாலிய மொழியில், பசிலிக்கா டி சான் பியெட்ரோ இன் வாட்டிகானோ எனப்படுகிறது. இது வாட்டிகன் நகரில் அமைந்துள்ளது. இது, கிறிஸ்தவ உலகின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகவும், பெரும் தேவாலயங்களில் ஒன்றாகவும் தனித்துவமான இடத்தைப் பெற்று விளங்குகிறது. கத்தோலிக்க மரபுகளின்படி, இது யேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான சென். பீட்டரின் அடக்கத் தலம் ஆகும். இவர் அன்டியோக்கின் மேற்றிராணியார் ஆகவும், பின்னர் ரோமின் மேற்றிராணியார் ஆகவும் இருந்தார். இதனால், பாப்பாண்டவர் பதவிக்கான வரிசையில் இவர் முதல்வராக விளங்கினார். ரோமில் உள்ள பல தேவாலயங்களை விடப் பெயர் பெற்றதாக இத் தேவாலயம் இருப்பினும் தரவரிசையில் இது முதல் தேவாலயம் அல்ல. பாப்பாண்டவரின் பேராலயமான சென். ஜோன் லன்டேர்ன் பசிலிக்காவே முதல் இடத்தில் உள்ளது.
கத்தோலிக்க மரபின்படி செயிண்ட் பீட்டரின் சமாதி, பீடத்துக்குக் (altar) கீழ் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், முதல் பாப்பாண்டவர் உட்படப் பல பாப்பாண்டவர்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாலாம் நூற்றாண்டு முதலாகவே இவ்விடத்தில் ஒரு தேவாலயம் இருந்துள்ளது. தற்போதைய பசிலிக்காவின் கட்டுமானம், முன்னிருந்த கொன்ஸ்டன்டீனிய பசிலிக்காவின் மேல் 1506 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1626 ஆம் ஆண்டில் நிறைவேறியது.
சென். பீட்டரின் பசிலிக்கா, இதன் சிறப்பு வழிபாட்டுச் செயல்முறைகளுக்காகவும், அதன் வரலாற்றுத் தொடர்புகளுக்காகவும் ஒரு யாத்திரைக்குரிய இடமாகப் புகழ் பெற்றது. இது பல வரலாற்று நிகழ்வுகளுடனும், ஏராளமான கலைஞர்களுடனும் தொடர்புபட்டது. சிறப்பாக மைக்கலாஞ்சலோ இதனுடன் தொடர்புள்ள முக்கியமான ஓவியர் ஆவார். கட்டிடக்கலை ஆக்கம் என்ற வகையில் இக் கட்டிடம் அக்காலத்தின் மிகச் சிறந்த கட்டிடமாகப் போற்றப்பட்டது.