திம்பக்து (Timbuktu, ஆங்கிலம் பலுக்கல்: iconˌtɪmbʌkˈtuː; பிரெஞ்சு: Tombouctou), என்பது மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இது நைஜர் ஆற்றுக்கு வடக்கே 15 கிமீ தூரத்தில், சகாராவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 54,453 (2009) ஆகும். திம்பக்து நகரத்தின் வரலாற்று மையத்தை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
கிபி 12ம் நூற்றாண்டில் இங்கு நிரந்தரமான குடியேற்றம் ஆரம்பித்தது. உப்பு, தங்கம், தந்தம், மற்றும் அடிமைகளின் வணிகப் பாதைக்காக திம்பக்து பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலி பேரரசுக்குள் வந்தது. 15ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்நகரத்தை துவாரெக் இனத்தவர்கள் சில காலம் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் 1468 ஆம் ஆண்டில் சொங்காய் பேரரசு தம் கட்டுப்பாட்டுக்குள் இந்நகரைக் கொண்டு வந்தது. 1591 ஆம் ஆண்டில் மொரோக்கோ இராணுவம் இதனைக் கைப்பற்றியது.
ஆக்கிரமிப்பாளர்கள் இங்கு ஆர்மா என்ற புதிய ஆளும் வகுப்பு ஒன்றை நிறுவினர். இப்பகுதி 1612 ஆம் ஆண்டில் மொரோக்கோவிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆனாலும், இப்பிராந்தியத்தின் பெருமைமிக்க பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. பல இனத்தவர்கள் இப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பின்னர் 1893 ஆம் ஆண்டில் பிரான்சு கைப்பற்றியது. 1960 ஆம் ஆண்டில் இப்போதைய மாலிக் குடியரசின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. பாலைவனமாதல் போன்ற பல காரணிகளால் இப்பகுதி தற்போது வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. ஆனாலும், இப்பகுதியில் தற்போதும் காக்கப்பட்டு வந்துள்ள பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைப் பாதுகாப்பதற்காகப் பல முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இங்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வருவாயாக உள்ளது.
திம்பக்து வரலாற்றின் பொற்காலத்தில், பல இசுலாமிய அறிஞர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். சங்கோர் மத்ரசா எனப்படும் இசுலாமியப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் இங்கு அமைந்திருந்தன. இதனால் ஆப்பிரிக்காவின் இசுலாமியக் கல்வி மையமாக திம்பக்து திகழ்ந்தது.
2012 ஏப்ரல் 1 இல், திம்பக்து நகரம் உட்பட மாலியின் வடக்குப் பகுதிகள் அனைத்தும் அசவாத் போராளிகளாலும், அல்-கைதாவுடன் தொடர்புடைய அன்சார் தைன் எனப்படும் இசுலாமியப் போராளிகளாலும் மாலி அரசுப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இப்பகுதிஅசவாத் எனத் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.