உஜ்ஜைன் மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைன் மாவட்டத்தினதும், உஜ்ஜைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.
முற்காலத்தில் இது உஜ்ஜயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவாந்தி அரசின் தலைநகரமாகும். கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய இந்துப் புவியியலாளர்கள் முதல் புவிநெடுங்கோடு உஜ்ஜயினிலேயே இருப்பதாகக் கொண்டனர். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.
உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவாந்தி அரசின் தலைநகரமாக இருந்தது. கிமு 4ஆம் நூற்றாண்டில் இந்துப் புவியியலின் முதல் நெடுங்கோடாகக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகன் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் சுங்கர்களும், சாதவாகனர்களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், மேற்குச் சத்திரப்புகள் என அறியப்பட்ட இந்திய-சித்தியர்களான சாகர்களும் இந் நகருக்காகப் போட்டியிட்டனர். சாதவாகன மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. குப்தர்கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. விக்கிரமாதித்தன் எனப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தனின் மரபுவழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே சமஸ்கிருத இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க புலவர்கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.