கல்ஆ அல்-பகுறைன் (Qal'at al-Bahrain, அரபு மொழி: قلعة البحرين), அல்லது பகுறைன் கோட்டை (Fort of Bahrain) மற்றும் முன்னதாக போர்த்துக்கல் கோட்டை (Qal'at al Portugal) என்றழைக்கப்படும் இத்தொல்லியல் இடம் அராபியத் தீபகற்பத்தில் பகுறைன் நாட்டில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு முதல் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் 12 m (39 ft) உயரத்திற்கு செயற்கையாக அமைக்கப்பட்ட மண்மேட்டில் பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த மண்மேடு கி.மு 2300 இலிருந்து 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு ஆட்சியாளர்களால் பல அடுக்குகளில் வலிதாக்கப்பட்டுள்ளது. காசைட்டுக்கள், போர்த்துக்கேயர் மற்றும் ஈரானியர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். ஒரு காலத்தில் தில்முன் நாகரிகத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இந்த இடத்தை 2005 இல் உலக மரபிடமாக அறிவித்துள்ளது.
இக்கோட்டையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் பகுரைன் நாட்டின் வரலாற்றைக் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இவ்விடத்தில் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதையும் செப்பு, வெண்கலக் காலகட்ட வரலாற்றுச் சான்றுகளையும் இவை நிலைநிறுத்துகின்றன.
இங்கு பகுரைனின் முதல் கோட்டை கி.மு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகுரைன் தீவின் வடகிழக்கில் கட்டப்பட்டது. தற்போதைய கோட்டை கி.பி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. தில்முன் நாகரிகத்தின் தலைநகரமாக, தில்முன் என்ற பெயருடன் இவ்விடம் இருந்துள்ளது; கில்காமேசு காப்பியத்தின்படி இது சுமேரியாவின் முன்னோர்களின் இடமாகவும் "அழிவில்லா இடமாகவும்" கடவுளரின் சந்திப்பு இடமாகவும் இருந்தது.
இந்த இடத்தை பகுரைனின் "மிகவும் குறிப்பிடத்தக்க தொல்லியல் களம்" என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முதன்முதலில் டேனிசு ஆய்வாளர்கள் 1954 இக்கும் 1972 இக்கும் இடையே கோப்ரே பிப்பி தலைமையில் அகழ்வாய்வு செய்தனர். பின்னதாக பிரான்சியக் குழு 1977 முதல் ஆராய்ந்தது.1987 முதல் பகுரைன் தொல்லியலாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொல்லியல் ஆய்வுகள் இங்கு ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை உறுதிப்படுத்தி உள்ளன; தில்முன் பேரரசு இதில் மிகவும் தொன்மையான நாகரிகமாகும். டேனிசு ஆய்வாளர்கள் இது குறிப்பிடத்தக்க கிரேக்க (எலெனிய) இடமாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கோட்டையும் மண்மேடும் பகுறைன் தீவில் வடக்குக் கடலோரத்தில் கட்டப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கின்ற நாட்களில் கோட்டையை பகுறைனின் சார் நகரிலிருந்தும் காணலாம். பகுரைன் தலைநகரமான மனாமாவின் நுழைவாயிலைப் போன்று இக்கோட்டை உள்ளது. மனாமாவிலிருந்து 6 km (4 mi) தொலைவில் உள்ளது. வளைகுடாப் பகுதியில் உள்ள மிகப்பெரும் மண்மேடாக விளங்கும் இது துறைமுகத்திற்கு அருகில் மீட்கப்பட்டக் கடற்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.
கல்ஆ அல்-பகுறைன் ஓர் அரபு மணற்மேடு ஆகும்; – அடுத்தடுத்த மனிதக் கட்டமைப்புக்களின் இடிபாடுகளாலான மணற்திட்டு ஆகும். இது 180,000 sq ft (16,723 m2) பரப்பில் அமைந்துள்ளது. இங்கு கி.மு 2300 இலிருந்து 16 ஆவது நூற்றாண்டு வரை மனிதர் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகளை பகிரும் மேடாகும். இதில் 25% இடம் ஆய்விற்காக அகழப்பட்டுள்ளது; இந்த ஆய்வுகளில் பலவகை கட்டமைப்புகள் வெளிவந்துள்ளன: வீடுகள், பொதுவிடங்கள், வணிகவிடங்கள், சமயவிடங்கள் மற்றும் படைத்துறை இடங்கள். பல நூற்றாண்டுகளாக இங்குள்ளத் துறைமுகத்தில் வணிகம் செய்யப்பட்டு முதன்மைத் துறைமுகமாக விளங்கியதை வெளிப்படுத்துகின்றன. 12 metres (39 ft) உயரமுள்ள மணற்மேட்டில் கல்ஆ அல்-புர்துகல் (போர்த்துக்கேய கோட்டை, கட்டப்பட்டுள்ளது. தில்முன் நாகரிகத்தின் தலைநகரமாக விளங்கியதால் இந்த நாகரிகத்தைக் குறித்த அரிய தொல்லியற் பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. அதுவரை இவை சுமேரிய எழுத்துக்கள் மூலமே அறியப்பட்டிருந்தன.
இங்கு பல இடங்கள் உள்ளன: சார் கல்லறை, அல்-அஜர் அரண்மனை, காசைட்டு அரண்மனை, மடிமத்து எர்மண்டு கல்லறை, மடிமத்து இசா கல்லறை, அல்-மாக்ஷா கல்லறை, உப்பேரி அரண்மனை, சகுரா கல்லறை, வடக்கு நகரச்சுவர். செப்புக்கால இடிபாடுகளில் சாலைகளையும் வீடுகளையும் சூழ்ந்திருந்த கோட்டைச்சுவரின் இரண்டு பிரிவுகளும் பெரியக் கட்டிடமொன்றும் எஞ்சியுள்ளன. மையக் கட்டிடத்தின் சுவர்களைச் சுற்றி பார்பர் மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவை பார்பர் கோவில் காலத்தைவையாக இருக்கக் கூடும். இதற்கு முந்தையக் காலத்து, கி.மு 3000 இக்கும் முந்தைய, தொல்லியற் பொருட்களும் கிடைத்துள்ளன. செப்பு, தந்த எச்சங்கள் அக்காலத்திய வணிகப் பரிமாற்றத்தை எடுத்துரைக்கின்றன. பல மட்கலங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன; உப்பேரி அரண்மனைப் பகுதியில் டேனிசுக்காரர்கள் "பாம்பு குழிக்கிண்ணங்கள்", நடுகற்கள், அரசச் சின்னங்கள், முகம் காணும் கண்ணாடி போன்றவற்றை கண்டெடுத்துள்ளனர்.