மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் (National Mosque of Malaysia, Masjid Negara) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலாகும். 13 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தப் பள்ளிவாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு தொழ முடியும். இந்தப் பள்ளிவாசல் 1965 ஆம் ஆண்டில் முன்னர் கிறித்தவக் கோயில் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டது. வென்னிங்கு வீதி உடன்பிறப்பு நற்செய்தி மண்டபம் என்ற கோயில் 1922 ஆம் ஆண்டு வரையில் இங்கு இருந்தது, அது பின்னர் மலேசிய அரசால் அழிக்கப்பட்டது. பள்ளிவாசலின் பிரதான கூரை குடைவடிவில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். அத்துடன் 73 மீற்றர் உயரம் கொண்ட மினாரத்தும் (முகப்புக் கோபுரம்) பள்ளிவாசலுக்கு அழகு சேர்க்கிறது. அத்துடன், பள்ளிவாசலை சுற்றி அழகிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல் மூன்று கட்டடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. இசுலாமியக் கட்டிடக்கலைகளைப் பிரதிபலிக்கும் இப் பள்ளிவாசல் பிரித்தானியக் கட்டடக்கலைஞர் ஹவார்ட் அஷ்லி, மலேசியாவின் கட்டடக்கலைஞர்கள் ஹிஷாம் அல்பக்ரி, பஹ்ருத்தின் காசிம் ஆகியோரின் பங்களிப்பிலேயே நிர்மாணிக்கப்பட்டது.
1965 ஆம் ஆண்டு மலேசியாவின் விடுதலைச் சின்னமாக இந்த பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.