கோடை அரண்மனை (ஆங்கிலம்: Summer Palace; எளிய சீனம்: 颐和园; மரபுவழிச் சீனம்: 頤和園; பின்யின்: Yíhéyuán), என அழைக்கப்படும் இவ்வரண்மனை, ஆசியாவின் கிழக்கு பிராந்தியமான சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடை மாளிகை, குன்மிங் என்னும் செயற்கை ஏரியின் மத்தியில் விசாலமான பூங்காவோடு அமைக்கப்பெற்றுள்ளது. சீனாவின் பாரம்பரியமிக்க தளமாக அறியப்பட்ட இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயற்பாட்டில் உள்ளது. முக்கியமாக, ஆயுள் மலையும் (Longevity Hill) குன்மிங் ஏரியும் (Kunming Lake) வியாபித்திருக்கும் இப்பகுதி முக்கால்வாசி நீரால் சூழப்பட்டு, 2.9 சதுர கிலோமீட்டர் (1.1 சதுர மைல்) பரப்பளவாக கொண்டதாக உள்ளது.
சுமார் 60 மீட்டர்கள் (200 அடி) உயரமான ஆயுள் மலையில், படிப்படியான வரிசையில் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகோடுகூடிய மலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள், கூடாரங்கள் போன்று கூர்மையான கூரைகளுடனும், விசாலமான அரங்குகளோடும் காணக்கிடைக்கின்றன. குன்மிங் ஏரியின் மத்தியில் 2.2 சதுர கிலோமீட்டர் (540 ஏக்கர்கள்) கொண்ட மத்திய குன்மிங் ஏரி முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப் பட்டது. அதற்காகத் தோண்டி எடுக்கப்பட்ட மண்கற்களைக் கொண்டு நீண்டஆயுள் மலை உருவாக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோடை அரண்மனையை யுனெஸ்கோ தனது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்தது. "அது கோடை அரண்மனை, சீனத்தின் ஒரு தலைசிறந்த இயற்கை தோட்டக்கலை அமைப்பு” என அறிவித்துள்ளது. இயற்கை சாயலில் அமைத்துள்ள செயற்கை "நெடிய ஆயுள்" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய "குன்மிங்" ஏரியும், அரண்மனைகள், அரங்குகள், அழகிய நிலவியல் அமைப்புகள், பாலங்கள், மற்றும் ஆலயங்கள், மண்டபம் போன்ற செயற்கை அம்சங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. கோடை அரண்மனையின் இயற்க்கையான தோற்றம் பெற காரணியாக ஏரி, மலை, மற்றும் பூங்காக்காளால் அமைந்திருப்பதேயாகும் கோடைகால மாளிகையாக விளங்கும் இந்த அரண்மனை, நான்கு பாகங்களாக பிரித்து ஆளப்பட்டுள்ளது தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதி, மற்றும் ஏரிபகுதி. இவ்வமைப்பின்படி, தர்பார்பகுதி வடகிழக்கிலும், அரண்மனை நுழைவாயில் கிழக்கு திசையிலிருந்து ஏரியின் வடகிழக்கு கரைவரை அமைக்கப்பட்டள்ளது இங்கேதான் குவான்சூ சக்கரவர்த்தி அவரது துணைவியார், மற்றும் அவரது அரசு அலுவலர்களும் ஆலோசனைகளும் விவாதங்களும் நடத்தப்பட்டது.
கோடை அரண்மனை 1750 - 1764 ஆம் ஆண்டுகாலத்தில் முதன்முதலாக, பேரரசர் க்யான்லாங் (Qianlong) என்பவரால் கட்டப்பட்டது. குன்மிங் ஏரியின் பின்புல அமைப்போடு, நீண்ட ஆயுள் மலைமுகடுகளில் 70.000 சதுர மீட்டர் பரபளவில் 3000 குடில்களை தோட்டக்கலை நயத்துடன் நிர்மாணிக்கப்பட்டது. பின்பு 1860 - 1900 ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு யுதத்தால் சிதைவடைந்த அந்த மாளிகையை 1912ல் குயிங் வம்சத்தின் அரசால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1924ல் சுற்றுலா தளமாக அறிவித்தனர்.
பெய்ஜிங்கின் மத்திய பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்கள்) தொலைவில் வடக்கில் அமைந்துள்ள கோடை அரண்மனை, ஏரி மற்றும் பூங்காக்காளால் சூழப்பட்டிருக்கிறது. இதைசுற்றி குன்மிங் ஏரியும், பலயுகங்களை கடந்து வந்த நெடிய ஆயுள் மலையும் தனித்துவமாக காணபடுகின்றது. சீன மக்கள் இந்த பகுதியை முதலில் சின்யியுவான் (தெளிவான நீரலை பூங்கா) (Garden of Clear Ripples) என்றழைத்தார்கள் பின்பு 19 ஆம் நூற்றாண்டில் இது கோடைகால அரண்மனை என பெயர்மாற்றம் பெற்றது.