பாக்தாத் உயிரியல் பூங்கா (The Baghdad Zoo) ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் 1971 ஆம் ஆண்டு காலத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அல் சவ்ரா தோட்டத்தில் அமைந்திருந்த இப்பூங்காவுடன் அல் சவ்ரா கேளிக்கைப் பூங்கா, அல் சவ்ரா கோபுரம் போன்றவையும் அமைந்திருந்தன. 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்கு முன்னர் இப்பூங்காவில் 650 விலங்குகள் இருந்தன. 2003 இல் போர் நடந்தபோது இப்பூங்கா பேரழிவிற்கு உள்ளானது. அப்பொழுது இங்கு 35 விலங்குகள் மட்டுமே பிழைத்திருந்தன. மீண்டும் இப்பூங்கா திறக்கப்பட்டு தற்பொழுது 1070 விலங்குகள் பாதுகாப்புடன் உள்ளன.
அகமது அசன் அல் பகார் குடியரசுத் தலைவராக இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் பாக்தாத் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது. போதிய வசதிகள் இல்லாமல் இடைவெளிகளில் விலங்குகளை சிறை வைத்திருப்பது போல ஒரு மனிதநேயமற்ற செயலாக அச்சூழல் விளங்கியது. முதலாவது வளைகுடா போருக்குப் பின்னர், இராக்கின் மீது ஐ.நா விதித்த பொருளாதாரத் தடைகள் இப்பூங்காவையும் பாதித்தன. வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுகள், மருந்துகள், தடுப்பு மருந்துகளால் விலங்குகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயின.
2002 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் புணரமைப்புப் பணிகளுக்காக சதாம் உசேன் இப்பூங்காவை மூடினார்
2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பின் போது உயிரியல் பூங்கா அழிக்கப்பட்டது. ஐ.நா. படைகள் பாக்தத்தை தாக்க ஆரம்பித்த நேரத்தில், முறையாக பயிற்சி இல்லாத போருக்குத் தயாராக இருந்த சதாமின் படைகள் பாதுகாப்புக்காக பூங்காவை சுற்றி வளைத்திருந்தன. தங்கள் சொந்த பாதுகாப்பைக் கருதி பூங்காவின் தொழிலாளர்கள் ஏப்ரல் 2003 இன் தொடக்கத்திலேயே விலங்குகளுக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டனர். போர் தொடங்கிய எட்டாவது நாளில் பூங்காவில் இருந்த 650 அல்லது 700 விலங்குகளில் 35 விலங்குகள் மட்டுமே பிழைத்திருந்தன.
பூங்காவின் அலுவலர்களும் அதிகாரிகளும் இல்லாத காரணத்தால் பூங்கா சூறையாடப்பட்டது. திருடர்கள் விலங்குகளின் கூண்டுகளின் கதவுகளைத் திறந்து நூற்றுக்கணக்கான விலங்குகளை விடுவித்தனர் அல்லது திருடிக் கொண்டனர். பாக்தாத் நகரில் உணவுத்தட்டுப்பாடு இருந்ததால் அவ்விலங்குகள் உணவுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம என்று பூங்காவின் பணியாளர்கள் பின்னாளில் தெரிவித்தனர்.
பல விலங்குகள் பூங்காவின் வெளியில் கர்ச்சனையுடன் சுற்றித்திரிந்தன. 20 வயது சைபீரிய புலியான மண்டார், பார்வையில்லாத பழுப்புநிறக் கரடி உட்பட எஞ்சியிருந்த மற்ற விலங்குகள் பசியாலும் தாகத்தாலும் கூண்டுகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. சதாம் உசேனின் மூத்த மகனான உதய் உசேன் மற்றும் அவருடைய மனைவி சாய்தா ஆகியோருக்கு மண்டார் புலி தனிப்பட்ட உடைமையாகும்.
பூங்காவில் இருந்து தப்பியோடிய பல சிங்கங்கள் ஆயுத வாகனங்களில் இருந்த அமெரிக்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. நான்கு சிங்கங்கள் கூண்டுகளுக்குத் திரும்ப முடியாமல் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன. படக்கதை ஆசிரியர் பிரயன் கே வாகன் இச்சிங்கங்களை அடிப்படையாக வைத்து பாக்தாத்தின் பெருமை என்ற ஒரு வரைகலை புனைவு நாவலை எழுதினார். இக்கற்பனைக் கதையில் ஒவ்வொரு சிங்கத்திற்கும் ஆளுமையையும் பேச்சையும் கொடுத்திருந்தார்.
2003 ஆம் ஆண்டின் எபரல் மாதத்தின் இடையில், தென்னாப்பிரிக்காவின் சூலுலேண்டு பகுதியில் உள்ள துலா துலா விலங்குகள் பாதுகாப்பிடத்தில் இருந்து தென் ஆப்பிரிக்க ஆர்வலரான லாரன்சு அந்தோணி இப்பூங்காவிற்கு வருகை தந்தார். இருந்து இரண்டு உதவியாளர்களுடன் குவைத் நாட்டிலிருந்து வாடகைக் காரில் இவர் வந்தார். போருக்குப் பின்னர் படைத்துறை சாராத தனிநபராக ஈராக்கிற்கு வந்தவர் இவரேயாகும். பூங்காவின் இயக்குநர்களான டாக்டர் ஆடெல் சல்மான் மௌசா மற்றும் டாக்டர் உசாம் முகமது உசான் மற்றும் திரும்பி வந்த சில பணியாளர்களுடன் இணைந்து இவர் புணரைப்புப் பணிகளை மேற்கொண்டார். எஞ்சியிருந்த விலங்குகளுக்கு தேவையான உணவு, ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அந்தோணி பாக்தாத் வந்து சேர்வதற்கு எட்டுநாட்கள் பிடித்தன. எனவே அந்த நாளில் எஞ்சியிருந்த விலங்குகளையே அவரால் காப்பாற்ற முடிந்தது.
பூங்காவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த அமெரிக்க இராணுவத்தின் தலைமை அதிகாரியான வில்லியம் சம்னர் அந்தோனி குழுவினருடன் இணைந்து பூங்காவை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டார் முதற்கட்டமாக அந்தோனியை அடுத்த 14 மாதங்களுக்கு பூங்காவின் இடைக்கால நிர்வாக அதிகாரியாக நியமித்தார். தொடர்ந்துவந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து இவருக்கு ஆதரவு அளித்தனர். உயிரியல் பூங்காவும் கேளிக்கைப் பூங்காவும் 2003 ஆம் ஆண்டு சூலை 20 இல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.