பம் (Bam; பாரசீகம்: بم) என்பது ஈரான் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள பம் பிரிவின் தலைநகரும் நகருமாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதனுடைய மக்கள் தொகை 73,823 ஆகவும் 19,572 குடும்பங்களாகவும் காணப்பட்டன.
தற்கால ஈரானின் பம் நகர் பம் அரணால் சூழப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின்படி, 2003 நிலநடுக்கத்திற்கு முன்பு நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 43,000 ஆக இருந்தது. அரணின் உருவாக்கம் காலம், காரணம் என்பன பற்றி பல கருத்துக்கள் காணப்படுகின்றன. பார்த்தீனியப் பேரரசினால் இது அமைக்கப்பட்டது என்ற கருத்து உள்ளது. பொருளாதார, வர்த்தக ரீதியாக பிரதேசத்தில் மிக முக்கிய இடமாக உள்ளதுடன் இதன் துணிகளும் ஆடைகளும் புகழ் பெற்றவை. அராபிய பயணியும் நிலயியலாளருமான இபின் கவ்கால் (943–977) தன் நூலான "சுரட் உல் ஆர்ட்" (உலக உருவம்) என்பதில் பின்வருமாறு பம் பற்றி எழுதியுள்ளார்:
அங்கே சிறந்த, அழகான, நீண்ட காலம் இருக்கக்கூடிய பருத்தி ஆடைகள் உலகிலுள்ள அரண்மனைகளுக்கு எல்லாம் அனுப்பப்படுகிறது. அங்கே அவை சிறந்த துணிகளால் உருவாக்கப்பட்டு, ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30 தினார்களுக்கு விற்கப்படுகின்றன. அவை குரோசான் மாகாணம், ஈராக், எகிப்து ஆகிய இடங்களில் விற்கப்பட்டன.பண்டைய அர்கே பம் அரண் 2000 வருடங்களுக்கு முன்னான ஒரு வரலாற்றை பார்த்தீனியப் பேரரசின் காலத்தில் (248 கி.மு–224 கி.பி) கொண்டுள்ளது. ஆனாலும் பல கட்டடங்கள் சஃபாவித் அரச மரபுக் காலத்தில் கட்டப்பட்டன. இந்நகர் 1722 இல் ஆப்கானிய படையெடுப்பால் பாரியளவில் கைவிடப்பட்டது. பின்னர், மெதுவாக நகரம் மீள் குடியேற்றத்திற்கு உள்ளானது. சிராசிலிருந்து வந்த படையெடுப்பால் இரண்டாவது முறையாகவும் இந்நகர் கைவிடப்பட்டது. மேலும், சிலகாலம் இது படைவீரர் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
தற்போதுள்ள பாம் நகர் பழைய அரணுக்குப் பின்னான காலத்தில் உருவாக்கப்பட்டது. இது மெதுவாக விவசாய, தொழிற்சாலை மையமாக தொடர்ச்சியான வளர்ச்சிக்கு, 2003 நிலநடுக்கம் ஏற்படும்வரை உள்ளானது. பொதுவாக இந்நகர் பேரீச்சை, தோடை இன பழங்களுக்கு புகழ்பெற்றது. மேலும் இந்நகர் சுற்றுலா மூலமும் நன்மையடைகிறது.
2003 பம் நில நடுக்கம் தென்கிழக்கு ஈரானின் கேர்மன் மாகாண சுற்றுவட்டாரத்தையும் பம்மையும் 01:56 UTC (5:26 மு.ப ஈரானிய பொது நேரம்) மணிக்கு 26 திசம்பர் 2003 அன்று பாரியளவில் தாக்கியது. நிலநடுக்க அளவாக 6.6 உந்தத்திறன் ஒப்பளவு (Mw) ரிட்சர் அளவு அதிகளவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை ஐக்கிய அமெரிக்காவின் நில அமைப்பியல் மதிப்பீட்டால் கணக்கிடப்பட்டது. நில நடுக்கம் பொதுவில் அழிவை ஏற்படுத்தியது. இதனால் 26,271 பேர் கொல்லப்பட்டும் மேலதிகமாக 30,000 பேர் காயப்பட்டனர். நில நடுக்கத்தின் தாக்கமும் பாதிப்பும் நகரில் உள்ள கட்டங்கள் சேற்றுக் கற்களால் கட்டப்பட்டதும், 1989 இல் ஈரானில் கொண்டுவரப்பட்ட நில நடுக்க ஒழுங்குக்கு ஏற்ப அமையாததாலும், நகரிலுள்ள பல மக்கள் உறக்கத்தில் கட்டடங்களுக்குள் இருந்நதாலும் அதிகளவில் ஏற்பட்டது.
நில நடுக்கத்தினால் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நில நடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இதனால் ஈரான் பன்னாட்டு அணுசக்தி முகமையகம் உடனான ஒப்பந்தத்திற்கு இணங்குவதாக உறுதியளித்தது. மொத்தத்தில், 44 நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆட்களை அனுப்பின. 60 நாடுகள் உதவிகளை வழங்கின.
விக்கிமீடியா பொதுவகத்தில் Bam தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |