ஃபதேஹ்புரி மசூதி, 17 ஆம் நூற்றாண்டில் டெல்லி சாந்தினி சவுக் அருகே கட்டப்பட்ட மசூதி. செங்கோட்டைக்கு எதிரே சாந்தினி சௌக் பகுதியின் மேற்கு முனையில் இந்த ஃபதேஹ்புரி மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியானது பேரரசர் ஷாஜஹானின் மனைவியருள் ஒருவரான ஃபதேஹ்புரி பேகம் என்பவரால் 1650ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.
சிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியானது டெல்லி நகரத்தில் உள்ள ஒரே ஒரு ‘ஒற்றை குமிழ்கோபுர தொழுகை மசூதி’யாக விளங்குகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய மசூதி போன்று காட்சியளித்தாலும், உள்ளே நுழைந்து பார்க்கும்போது இதன் உள் கட்டமைப்பு பிரம்மாண்டமானதாக காட்சியளிக்கிறது.
பாரம்பரிய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மசூதியின் தொழுகைக்கூடத்திற்குள் நுழைவதற்கு விதான வளைவுகளைக்கொண்ட ஏழு வாசல்கள் உள்ளன. நடுவிலுள்ள விதான வளைவு அளவில் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மசூதிக்கு இருபுறமும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்குகளைக்கொண்ட கட்டிட அமைப்புகளும் காணப்படுகின்றன.
ஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்துக்குள் நுழைய மூன்று பிரதான நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று செங்கோட்டைக்கு எதிரிலேயே உள்ளது. இதர இரண்டு நுழைவாயில்கள் மசூதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ளன. ஈத்-உல்-ஃபித்ர் மற்றும் ஈத்-உல்-அல்ஹா ஆகிய பெருவிழாதினங்கள் இந்த மசூதியில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
ஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்திற்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வாசனைப்பொருள் சந்தையாக அறியப்படும் ‘காரி பாவ்லி’ மார்க்கெட் இந்த ஃபதேஹ்புரி (மஸ்ஜித்) மசூதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.