அதிரப்பள்ளி அருவி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையார் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்பகுதியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அணை கட்ட கேரள அரசு முன்மொழிந்த திட்டம் சர்ச்சையை கிளப்பியது. 1990 முதல் 2007 வரை இச்சர்ச்சை நீடித்தது.
அதிரப்பள்ளி அருவிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவிலுள்ள சாலக்குடியில் உள்ளது ஆகும். வானூர்தி நிலையம் 54 கிமீ தொலைவிலுள்ள கொச்சி பன்னாட்டு நிலையமாகும். திருச்சூர் 58 கிமீ தொலைவில் உள்ளது. சாலக்குடியில் இருந்து வாடகை மகிழுந்துகள் மூலமும் பேருந்துகள் மூலமும் இவ்வருவிக்கு எளிதில் செல்லலாம்.
இந்த அருவிக்கு இந்தியா முமுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தின் நீர் வரத்து நன்கு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சிறந்ததாகும்.
அருவி அமைந்த பகுதி மிக அழகாக இருப்பதன் காரணமாக இது திரைப்படம் எடுப்பவர்களை கவர்ந்துள்ளது. பல்வேறு மலையாளப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. 1996 ல் கமல்ஹாசன் நடித்த தமிழ் படமான புன்னகை மன்னன் இங்கு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் புன்னகை மன்னன் அருவி என்று இதற்கு பட்டப்பெயர் உண்டு. இருவர் திரைப்படத்தில் வரும் நறுமுகையே நறுமுகையே என்ற பாடல் இங்கு எடுக்கப்பட்டதாகும். இராவணன் திரைப்படத்திலும் இவ்வருவிப்பகுதி இடம்பெற்றுள்ளது.
1994ல் கேரள மின்சார வாரியம் 163 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை முன் மொழிந்தது. 23 மீட்டர் உயரமும் 311 மீட்டர் அகலமும் உடைய சாலக்குடி ஆற்றின் குறுக்கே அணையுள்ள அணை இதில் ஒன்றாகும். இது வழச்சல் காட்டுப்பகுதியிலும் அதிரப்பள்ளி அருவிக்கு மேல் 5 கிமீ தொலைவிலும் வழச்சல் அருவிக்கு மேல் 400 மீட்டர் தொலைவிலும் கட்டப்படும் என தெரிவித்தது. இதனால் சுற்றுச்சூழலும் சுற்றுலாவும் பாதிக்கப்படும் என பல ஆர்வலர்கள் இத்திட்டத்தை எதிர்த்தார்கள். மேலும் இத்திட்டத்தால் சாலக்குடி ஆற்றின் நீர் முழுவதும் மின் உற்பத்திக்கு திருப்பி விடப்பட்டு அதிரப்பள்ளி - வழச்சல் அருவிகள் நீர் இன்றி வறண்டு விடும் என அச்சப்பட்டார்கள். இதனால் கேரள மின்சார வாரியம் அருவிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அளவு நீரை அருவிக்கு திறந்து விட ஓர் திட்டத்தை முன்மொழிந்தது. 2005ல் கேரள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அணை திட்டத்துக்கு அனுமதி அளித்தது. 2006ல் கேரள உயர் நீதிமன்றம் அந்த அனுமதியை நீக்கிவிட்டு மீண்டும் பொது மக்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என உத்தரவிட்டது. 2007லும் இதுதொடர்பான தருக்கம் தொடர்ந்தது.