அவுக்கண புத்தர் சிலை வடமத்திய இலங்கையில், கெக்கிராவை என்னும் இடத்துக்கு அண்மையில் நின்ற தோற்றத்தில் உள்ள புத்தர் சிலை ஆகும். 12 மீட்டர் (40 அடி) உயரம் கொண்ட இச்சிலை, பெரிய கருங்கற்பாறை முகப்பில் செதுக்கப்பட்டுள்ளது. இது கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அபய முத்திரைத் தோற்றத்தின் வேறுபட்ட ஒரு தோற்றத்தை இச்சிலை காட்டுகிறது. உடை மிகவும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தாதுசேன மன்னனின் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சிலை ஒரு ஆசிரியருக்கும், மாணவனுக்கும் ஏற்பட்ட போட்டியின் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவுக்கண சிலை, இலங்கையில் அமைக்கப்பட்ட நிற்கும் புத்தர் சிலைகளுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்களுள் ஒன்று. இது இப்போது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இடமாக உள்ளது.
கெக்கிராவைக்கு அண்மையில் உள்ள இச்சிலை கலா வெவ எனப்படும் ஏரிக்கு அண்மையில் அதை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாறை முகப்பில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை பாறையில் இருந்து முழுமையாகப் பிரிக்கப்படவில்லை. சிலையின் பின்பகுதியில் ஒட்டியுள்ள ஒரு ஒடுக்கமான பாறைப் பகுதி பின்னுள்ள பாறையுடன் சிலையைப் பிணைத்துள்ளது. சிலை நிற்கும் பீடம் தாமரை வடிவில் தனியாகச் செதுக்கப்பட்டு சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது. சிலை மட்டும் 11.84 மீட்டர் (38 அடி 10 அங்குலம்) உயரம் கொண்டது. பீடத்துடன் மொத்த உயரம் 13 மீட்டர் (42 அடி).