இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் (Westminster Cathedral) இங்கிலாந்து மற்றும் வேல்சு கத்தோலிக்க மக்களின் தாய்க் கோவில் ஆகும். தவிர வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரின் மறைமாவட்ட ஆலயமாகவும் மண்டலப் பெருங்கோவிலாகவும் உள்ளது. இது இயேசு கிறித்துவின் தூய திரு இரத்தத்திற்கு நேர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேவாலயம் உள்ள இடமானது முன்பு புனித பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) சபைத் துறவியரின் உடைமையாக இருந்தது. இக்கோவிலின் அண்மையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் துறவியர் இல்லத்தை நிறுவியதும் அவர்களே. 1885ஆம் ஆண்டில் வெஸ்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டம் இந்த நிலத்தை வாங்கியது.
இந்தப் பேராலயம் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலேயே மிகப் பெரியது. இதனை அருகிலுள்ள இங்கிலாந்து திருச்சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் துறவியர் இல்லத்துடன் குழப்பல் ஆகாது.
வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டப் பேராயரின் ஆட்சிபீடமாக உள்ளது. தற்போது மேதகு முனைவர் வின்சென்ட் நிக்கோல்சு பேராயராக உள்ளார். இம்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர்கள் அனைவருமே கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டதைக் கருதும்போது, நிக்கோல்சும் விரைவில் கர்தினால் பதவி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |